வாலி கேட்ட ஒரு கேள்வி… வாயடைத்துப் போன எம்ஜிஆர்! இது வாலியின் வாலிபக் கூத்து!

சென்னை: வாலிப கவிஞர் வாலியின் 87 வது பிறந்தநாளில் அவரின் இளமையை கொண்டாடுவோம்.

வாலி என்ற பெயரை உச்சரித்தாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது கொண்டாட்டம் தான். தமிழ்த்திரை கவிஞர்களில் வாலி அளவிற்கு கொண்டாட்ட மனநிலையில் இருந்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் பொழுதை கழிப்பதற்கும் கொண்டாட்ட மனநிலையோடு சர்வகாலமும் வாழ்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. இவர் கொண்டாட்ட மனநிலையில் வாழ்ந்தவர். அதனால் என்றும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பார்.

வயோதிகக் கிழவனுக்கும் வாலிபத்தை உசுப்பேத்திவிடும் குசும்பு வாலி பிறப்பிலேயே வாங்கிவந்த வரம். வாலியும் கண்ணதாசனும் இரண்டு கண்கள் என எம்.எஸ்.வி சொன்னதுபோல இளமையான எழுத்துக்களின் கண்களாக வாலி இருந்திருக்கிறார்.

சி.எஸ்.ஜெயராமன்

சி.எஸ்.ஜெயராமன்

ஸ்ரீரங்கத்தில் வாலியின் நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜெயராமனை புக் செய்த இசையமைப்பாளர் ராமமூர்த்தி, வாலியுடன் தான் நீங்கள் திருச்சிக்கு செல்கிறீர்கள் எனக் கூற மறந்துவிட்டாராம். ஜெயராமனுக்கும் வாலிக்கும் அறிமுகமில்லை. ஆனால் வாலியுடன் ஜெயராமன் காரில் செல்கிறார். அப்போது ஜெயராமன் கச்சேரி பாடலை ஆலாபனை செய்ததும் அதைக் கேட்ட வாலி, பலே என பாராட்டியிருக்கிறார். இருவரும் பரஸ்பரம் பேசும் போது வாலி பாட்டு எழுதுபவர் எனக் கூற, அவர் எழுதிய முருகன் பாடலைக் கேட்டுவிட்டு "இந்த பாட்டு நான் ஏற்கனவே கேட்டிருக்கேன். நீங்க எழுதியதுன்னு தெரியாது. நல்லா எழுதுறீங்க நீங்க ஏன் சினிமாவில் பாட்டெழுதக் கூடாது? உங்க எழுத்து அர்த்தமுள்ளதாக இருக்கு தம்பி, நீங்க முயற்சி பண்ணுங்க தம்பி, இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சி.. விஸ்வநாதன் ராமமூர்த்திகிட்ட யாரோ வாலின்னு ஒருத்தன் அதிகமா பாட்டெழுதுறானாம். ஒரே கட்சிப்பாட்டா இருக்கு. அவன் எழுத்துக்கு உங்க எழுத்து எவ்வளவோ பெட்டெர்" என சொல்லி முடிக்கும்போது திண்டிவனத்தில் டீ பிரேக்கிற்காக கார் நின்றிருக்கிறது. அப்போது சில சிறுவர்கள் ஓடிவந்து "டேய்... கவிஞர் வாலிடா.." என ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார்கள். அதைக் கண்ட ஜெயராமன் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி.. நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கலாமே என்றாராம். நீங்க கேட்கவே இல்லையே என சிரித்திருக்கிறார் வாலி. "ஹ்ம்ம்ம்.. காவேரி தண்ணிக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்த்தி" என கன்னத்தை கிள்ளியிருக்கிறார் ஜெயராமன்.

கலைஞர்

கலைஞர்

இலக்கிய நயத்தோடு கலைஞர் கருணாநிதியை பலமுறை கிண்டலடித்திருக்கிறார் வாலி. கலைஞர் தலைமையில் கவியரங்கம் நடந்தபோது, கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதியை பற்றி கவிதை வாசிக்க வந்த வாலி... முதல் பாலிலேயே சிக்சர் அடிப்பதுபோல் "அறிவாலயத்தில் வீற்றிருக்கும் பகவானே" என்றார். கைத்தட்டல் அரங்கை கிழித்தது. கலைஞர் பாராட்டு விழா நடந்தபோது அரங்கத்தையே அதிரவிட்டார்."தலைவா 2007ல் எமனிடமிருந்து என்னை மீட்டாய்... அதற்கு முன் 2007ல் ஒரு வுமெனிடமிருந்து தமிழ் மண்ணை மீட்டாய்..

கலைஞர்கோனே,

கருப்புக் கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே

நீயே உனக்கு நிகர்

நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்

நிஜம் சொன்னால் ரஜினியை விட நீ ஒரு வசீகரமான ஃபிகர்"

இப்படி பல தருணங்களில் தன்னுடைய எதுகை மோனையால் வசீகரித்திருக்கிறார் வாலி.

வாலி கேள்வி

வாலி கேள்வி

இதுபோல் எம்ஜிஆரையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு பாடல் எழுதி முடித்த பிறகு ஒரு மதிய வேளையில் எம்ஜிஆருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, டைட்டில் கார்டில் வாலியின் பெயரை போடாமல் ரிலீஸ் செய்யப்போகிறேன் என எம்ஜிஆர் விளையாட்டாக சொன்னாராம். அது நிச்சயம் முடியாது என சொல்லியிருக்கிறார் வாலி. பார்க்கலாமா? உங்க பேர போடாம நான் ரீலீஸ் பண்ணி காட்டுறேன் பாருங்க.. என சவால் விட... எப்படி.."உலகம் சுற்றும் பன்" என்றா என ஒரு போடு போட்டிருக்கிறார். அவ்வளவுதான் எம்ஜிஆர் அப்படியே ஆஃப் ஆகிவிட்டாராம். எம்ஜிஆர் அப்போதும் வாலியை ஆண்டவர் என அழைக்கக் கூடியவர். 'தரை மேல் பிறக்க வைத்தான்...' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' நான் ஆணையிட்டால்..' 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...' 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு...' ‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...' போன்ற ஆல் டைம் ஃபேரைட் பாடல்களாக நம்மை ஆளும் எம்ஜிஆர் பாடல்களை எழுதியதால் அவர் எம்ஜிஆருக்கு ஆண்டவர் ஆகிப்போனார்.

எஸ்ஜே.சூர்யா

எஸ்ஜே.சூர்யா

கவிஞர் என்றால் தனிமையில் இருப்பார். பாடல் எழுதுவதற்கு ஃபாரின் போவார் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் வாலி. எந்த புறச்சூழலும் தன்னை தொந்தரவு செய்யாமல் காத்துக்கொள்ளும் மனவலிமை மிக்கவராக அவர் இருந்ததே அதற்கு காரணம் எனத் தோன்றுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் பரபரப்பில் கூட ஒரு வெள்ளைத் தாளை அவர் கையில் கொடுத்தால் சட்டென ஒரு காதல் பாடலோ கவிதையோ எழுதிக்கொடுக்கும் வல்லமை வாலிக்கு உண்டு. அதேபோல் தான் பெரிய கவிஞன் என கர்வத்தோடு இருந்ததே இல்லை. அதற்கு உதாரணமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ படத்திற்கு பாட்டெழுதியதைச் சொல்லலாம். வாலிக்கு போன் செய்த எஸ்ஜே.சூர்யா தான் நேரில் வரமுடியாத காரணத்தை சொல்லி தயக்கத்துடன் பாடல் கேட்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் வாலியின் வயதிற்கும் அனுபவத்திற்கும் முடியாது என சொல்லியிருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. அதுனால என்ன.. நான் சொல்றத எழுதிக்கோ... என்று ‘சக்கர இனிக்கிற சக்கர... அதில் எறும்புக்கு என்ன அக்கர..' என பல்லவியை போட்டாராம். அந்த பாடலை போனில் சொல்லும்போது அவர் வேறு ஒரு நிகழ்வில் பிசியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர்

கண்ணீர்

ஒருமுறை வாலியின் வீட்டில் பாம்பு புகுந்த நிகழ்வு பரபரப்பானது. வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வீட்டிற்குள் நுழைந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது மீடியாவும் வந்துவிட்டது. பத்திரிகையாளர்களைப் பார்த்த வாலி.. "படமெடுக்கும் பாம்பை படமெடுக்க வந்திருக்கும் பத்திரிகையாளர்களே வருக வருக" என வரவேற்றாராம். வாலிக்கு மீன்குழம்பு என்றால் மிக இஷ்டம், ஐயங்கார் நீங்க மீன்குழம்பு சாப்பிடுகிறீர்களே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு... "நான் பிராமின்.... எனக்கு பிடிக்கும் மீன்" என பஞ்ச் அடித்திருக்கிறார். வாலியின் கற்பனை வளம், சொல்வளம், தமிழ்வளம் இவற்றைத் தாண்டி என்றும் இளமையோடு இருந்ததுதான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பாட்டெழுதிய அதே விரல்கல்கள்தான் தனுஷுக்கும் எழுதியது. சமகால இளைஞர்களின் நாடித்துடிப்பை தேடிப்பிடித்து சாதித்தவர் வாலி. வாலி = ஜாலி என சொல்லிமளவிற்கு கொண்டாட்டமாக இருந்த வாலி. அவர் இரண்டு தருணங்களில் மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கினார் எனச் சொல்கிறார்கள். ஒன்று கண்ணதாசன் மறைவு, மற்றொன்று அவர் காதல் மனைவி ரமணத்திலகத்தின் மறைவு. கண்ணதாசனின் மறைவுக்கு "எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோபேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்து போட்டுவிட்டான்" என்று இரங்கற்பா எழுதி கண்ணீர்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X