நன்றிக் கடன்... இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்த ஊரில் சிலை வைக்கும் கவிஞர் வைரமுத்து!
சென்னை: திரைத் துறையில் தனக்கு மறுவாய்ப்புத் தந்த மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு அவரது சொந்த ஊரில் நினைவுச் சின்னம் அமைக்கிறார் கவிஞர் வைரமுத்து.
சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையுலகுக்குத் தந்தவர் கே பாலச்சந்தர். விவேக், பிரகாஷ் ராஜுக்கும் இவர்தான் குரு. கமல் ஹாஸன் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும், அவரை பண்பட்ட நடிகனாக உருவாக்கிய பெருமை கேபிக்குதான்.

இளையராஜா கூட்டணியில் தொடர முடியாமல், வைரமுத்து முடங்கிய நிலையில், அவருக்கு கை கொடுத்து தனது படங்களில் முழுப் பாடல்களையும் எழுத வைத்தவர் கே பாலச்சந்தர். பின்னர் தங்கள் தயாரிப்பான ரோஜாவில் ஏ ஆர் ரஹ்மானை இசையமைப்பாளராக்கி, அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வைரமுத்துவுக்குக் கொடுத்தார்.
அன்றிலிருந்து வைரமுத்து பயணம் தடையின்றி 25 ஆண்டுகள் கழித்தும் தொடர்கிறது.
தனக்கு மறு வாய்ப்புத் தந்தை, வாழ்க்கையை உயர்த்திய கே பாலச்சந்தருக்கு அவரின் பிறந்த நாளான ஜூலை 9-ம் தேதி வெண்கலச் சிலை திறக்கப் போகிறார் வைரமுத்து.
இயக்குநர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சிலை திறக்கப்படுகிறது.
விழாவில் கமல் ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வந்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று கூறப்பட்டதால், விழாவுக்கு வரவில்லை. வேறொரு நாளில் அவர் நன்னிலம் சென்று அஞ்சலி செலுத்துவார் என வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











