இசை ஞானி... இசை நீ! - (பத்ம விபூஷன் இளையராஜாவுக்கு வாழ்த்துப்பா!)
பாலூட்டும் போதே
ராகத்தையும்
ஸ்வரத்தையும்
சேர்த்து ஊட்டிய
சின்னத்தாயி அம்மாள்
பெற்ற முத்து நீ
இசை அறிந்த
மேதைகளின் சொத்து நீ!
உன் விரல் விளையாட்டில்
வாழும் உயிர்கள் ஏராளம்
உன் இசையில் - நீ
கொடுத்த உயிர் தாராளம்!

இலக்கியத்தில் புலவர் நீ
இசை உலகின் அவதார் நீ!
உன்னால் வென்ற
படங்கள் வெள்ளி விழா
உன் இசைத்தட்டுகள்
எல்லாம் பொன்விழா!
பாமரன் உணரும்
இசை ஓவியம் தீட்டினாய்
பார் போற்றும் இசையை
உன் வசம் ஆக்கினாய்!
நீ பாடினால் அடங்கும்
திரையரங்கம்
உன் பாட்டை கேட்டதும்
விழி திரையும் உறங்கும்!
வெற்றிக்காக உன்னை
அழைத்தனர் படத்தில்
வெற்றிடத்திலும் நீ
உணர்வை ஊட்டினாய் மெட்டில்!
இரண்டு எழுத்து
இசையின் அம்பானி நீ
திருவாசகத்தை திரட்டி
அமைத்தாய் சிம்பொனி!
பாட்டினால் நீ பெற்றது
எல்லாம் புகழ் மாலை
நீ புகழ்ந்து அமைத்ததோ
ரமண மாலை!
ஆயிரமாவது படத்திலும்
கொடுத்தாய் இசை விருந்து
நீ கொடுத்த இசை தட்டுக்கள்
அனைத்துமே அரு மருந்து!

ஆத்மாவில்
நுழைந்து - மனிதன்
தேடிக் கொண்டிருக்கும்
மனத்தை
கரைய வைத்த
கரைப்பான் உன் இசை!
வீழ்ந்து விதைக்கப்படும்
உயிர்கள் அல்ல
உன் இசை - நீ
கொடுத்ததோ
மரணமில்லா உயிர்!
ஆரவாரமின்றி
ஆர்பாட்டமின்றி
இசையை
மட்டுமே சுவாசித்து
இசைக் கடவுளை
நோக்கியே
பயணம் செல்லும்
நீ என்றுமே
இசை ஞானி!
- சிவமணி, வத்தலக்குண்டு.


Click it and Unblock the Notifications











