தீர்ந்தது புலி பிரச்சினை... 400 திரையரங்குகளில் போக்கிரிராஜா!
புலி படத்தால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டதால், பிடி செல்வகுமார் தயாரித்துள்ள போக்கிரி ராஜா படம் வரும் 4-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது.

இப்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டி ராஜேந்தர் கூறுகையில், "தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர். எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள்.
போக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.
தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications











