50 ரசிகர்களின் கருத்தைக் கேட்டு படத்தை "ஷேப்" செய்த "போக்கிரிராஜா" டீம்!
சென்னை: ஜீவா, சிபிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா திரைப்படத்தை, ரசிகர்கள் 50 பேருக்கு படக்குழு திரையிட்டுக் காட்டியுள்ளது.
சமீப காலமாக ரசிகர்களின் ரசனை வேகமாக மாறிவருகிறது. பிடித்த படத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகரின் படமென்றாலும் கூட படம் கவரவில்லை எனில் வறுத்தெடுத்து விடுகிறார்கள்.

சமூக வலைதளங்களின் பயன்பாட்டால் படத்திற்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமெனில், அதே சமூக வலைதளங்கள் சில படங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுவதை மறுப்பதற்கில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு போக்கிரி ராஜா படக்குழு ஒரு வித்தியாசமான வேலையைச் செய்திருக்கிறது. அதாவது சுமார் 50 ரசிகர்களை தேர்வு செய்த படக்குழுவினர் அவர்களுக்கு இந்தப் படத்தை போட்டுக் காட்டியிருக்கின்றனர்.
பின்னர் அவர்களின் கருத்தைக் கேட்டு போக்கிரி ராஜாவில் சில திருத்தங்களை செய்துள்ளனராம். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே புலி படத்தால் போக்கிரி ராஜாவிற்கு ஏற்பட்ட சிக்கலை மனதில் கொண்டு,இப்படத்தை வருகின்ற மார்ச் 4 ம் தேதி, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்துடன் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா நடிகர் ஜீவாவின் 25 வது படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











