இயக்குநர் சேரன் மீது போலீசில் புகார்!
இயக்குநர் சேரன் வாங்கிய பணத்தைத் திருப்பித்தர மறுத்ததாகக் கூறி அவர் மீது திருநெல்வேலி மாநகரக் காவல் துறை ஆணையரிடம் வக்கீல் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி, தச்சநல்லூரை அடுத்துள்ள மேல அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த வக்கீல் எம். குமரன். இயக்குநர் சேரன் நடத்தி வரும் சி2ஹெச் சினிமா பட சிடி நிறுவனத்தில் முகவர் ஆகும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான முகவரான நடேசன் என்பவர் மூலம் ரூ.4 லட்சத்தை வங்கி வரைவோலையாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பினார்.

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் குமரனுக்கு எந்தவித ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. மேலும், பணத்தை திரும்பக் கேட்டபோது, சேரன், நடேசன் ஆகிய இருவரும் தட்டிக் கழித்து வந்துள்ளனர்.
தொடந்து கேட்டதற்கு, பணத்தையும் தராமல், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சேரன், நடேசன், அவரது பங்குதாரர்கள் மீது திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார் குமரன். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











