ஓவியா தற்கொலை முயற்சியா..? விபரீதமானது பிக் பாஸ் விளையாட்டு!
பிக்பாஸ் நிகழ்ச்சி போகப் போக மிகவும் கேவலமான, வக்கிரமான நிகழ்ச்சியாக மாறி வருகிறது. குறிப்பாக அதில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியா தற்கொலைக்கு முயலும் அளவுக்கு வக்கிரமாக மாறியுள்ளது.
விஷயம் கேள்விப்பட்டு போலீசார் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை முயற்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

100 நாள் கூத்து
சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் ‘பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறும். இந்த நூறு நாட்களும் எல்லா அட்ராசிட்டிகளையும் தாங்கிக் கொண்டு தங்குபவர்தான் பிக்பாஸில் வெற்றி பெறுவார்.

ஓவியாவுக்கு பேராதரவு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திரைப்பட நடிகை ஓவியாவுக்கு கடந்த 40 நாட்களாக பேராதரவு மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள எல்லா பெண்களும் ஓவியாவுக்கு எதிரிகளாகவே உள்ளனர்.

தற்கொலை முயற்சி
அந்த நிகழ்ச்சியின்படி ஓவியாவை காதலிப்பது போல போக்குக் காட்டி, முத்தமெல்லாம் கொடுத்து பின்னர் ஏமாற்றிவிட்டார் பங்கேற்பாளர் ஆரவ். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா, நீரில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நேற்று தகவல் பரவியது.

போலீஸ் விரைந்தது
இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை, அவர் சற்று மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஓவியா உள்ளே இருக்கிறாரா என்று பார்க்க முடியுமா? என்று போலீசார் கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நடிகை ஓவியா படப்பிடிப்பு தளத்தில் உள்ளாரா? அல்லது வெளியில் உள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு புகார் ஏதும் வரவில்லை. ஆனாலும் தங்களுக்கு வந்த தகவலின் பேரிலேயே விசாரணை செய்துவிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
‘பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக ஓவியா இப்படிச் செய்தாரா? உண்மையிலேயே அவர் காதலித்து ஏமாற்றப்பட்டாரா என்பதை தீவிரமாக விசாரித்து ஓவியாவை காப்பாற்ற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











