'என்னப்பா இவ்ளோ வண்டில வரீங்க...?' - ரசிகர்கள் வாகனங்களைக் கணக்கெடுத்த போலீஸ்
நேற்று ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை நாள். பொதுவாக இந்த நாளில் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் நேற்று விதிவிலக்கு. திருச்சிக்கு வரும் அத்தனை நெடுஞ்சாலைகள் ஏகத்துக்கும் பிஸி. எங்கும் ரஜினி ரசிகர்களின் வாகனங்கள்மயம்.
வழியில் உள்ள கடைகளிலெல்லாம் ரசிகர்களின் வாகனங்கள் நின்றிருக்க, கடைகளில் திடீர் நெரிசல்.
பகல் 2 மணிக்கெல்லாம் சாலையோர உணவகங்களில் பகலுணவு தீர்ந்து போயிருந்தது.

"வழக்கமா 4 மணி வரைக்கும் சாப்பாடு இருக்கும். பல நாட்கள் சாப்பாடு மீந்து போய், வெளியில் கொட்டுவோம்... இல்லன்னா யாருக்காவது தருவோம். ஆனா இன்னிக்கு 2 மணிக்கே தீந்து போச்சி... ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாராமில்ல...நிறையப் பேரு வந்துட்டாங்க. அதான்," என்றார் ஒரு ஓட்டல்காரம்மா.
காலையிலிருந்தே நிறைய வாகனங்கள் ரஜினி படம், ரஜினி கொடி கட்டிக் கொண்டு சுங்கச் சாவடிகளைக் கடந்த வண்ணமிருந்தன. கவனமாக இவற்றைப் பார்த்து, குறிப்பெடுத்துக் கொண்டனர். சில வாகனங்களை மடக்கி, "என்னப்பா இவ்ளோ வண்டில வரீங்க... உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்கிறாரா ரஜினி? இந்த ஆளுங்களையெல்லாம் எங்கே புடிச்சீங்க... எவ்ளோ கொடுத்தீங்க?," என்றெல்லாம் விசாரித்தனர்.
"சார்... யாருக்கும் காசு தரல.. வேணும்னா கேட்டுப் பாருங்க...," என்று தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு வந்தனர்.
திருச்சி - கரூர் பைபாஸ் சாலை மாலை 4 மணிக்கே ஜாமாகிவிட்டது. வாகனங்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சாலையை இரு பக்கத்திலும் மூடி விட்டனர் காவல் துறையினர். பின்னர் மேலிடத்தில் பேசிய பிறகு 5 மணிக்கு சாலையைத் திறந்துவிட்டனர். ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி மக்கள் வெள்ளம் திரண்டுவிட, அங்குலம் அங்குலமாக நகர்ந்தது கூட்டம்.
வந்த கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து ஒரு போலீஸ் அதிகாரியிடம் பேசினோம். "12 மணி வரை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ரஜினி ரசிகர்களின் வாகனங்கள் வந்தன. ஆனால் திடீரென்று பார்த்தால் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் வண்டிகள் வந்துவிட்டதால் பார்க்கிங் பிரச்சினை வந்துவிட்டது. அதனால்தான் சிறிது நேரம் சாலையை மூடினோம். எப்படிப் பார்த்தாலும் 50 ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள். துல்லியமாகச் சொல்ல முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











