பொங்கல் படங்கள்... ஓபனிங் எப்படி?
பொங்கல் பண்டிகைக்கு 6 படங்கள் திரைக்கு வரத் தயாராக இருந்தன. ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாபாலான தியேட்டர்களை தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் இரு படங்களும் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஞ்சிய தியேட்டர்களை குலேபகாவலி ஆக்கிரமித்துக் கொண்டது.
இதனால் மற்ற படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப்போய் விட்டன. இறுதியாக தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் நேற்று வெளியாகின.

தாசேகூ
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்துள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
1987-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அக்ஷய்குமார், காஜல் அகர்வால் நடித்து இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் கருவை மையமாக வைத்து தமிழுக்கு ஏற்ப புதிய திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.
அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450 க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு சுமாரான ஓபனிங் இருந்தது. முதல் நாள் தமிழ் நாடு மொத்த வசூல் சுமார் 5.85 கோடி ரூபாய்.

ஸ்கெட்ச்
ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்- தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். மற்றும் சூரி, R. K.சுரேஷ், ஸ்ரீமான், வேல ராமமூர்த்தி, மதுமிதா நடித்துள்ள இப்படத்தை மூவிங் ப்ரேம் நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.
சிலம்பரசன் நடித்து வெளியான 'வாலு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஜய் சந்தர் டைரக்டு செய்துள்ளார்.
விக்ரம் நடித்த இருமுகன் படம் 2016 செப்டம்பர் மாதம் வெளி வந்து வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது.
அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்திற்கு ஓபனிங் நகர்புறங்களில் நன்றாக இருந்தது. முதல் நாள் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் ரூ 5.50 கோடி.
குலேபகாவலி படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் டைரக்டு செய்துள்ளார். புதையலை தேடி அலையும் பயணக்கதையாக படம் உள்ளது.

குலேபகாவலி
பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் குலேபகாவலி என்று விமர்சனம் வந்திருக்கிறது. ஆனால்வசூல் மிக மோசமாக உள்ளது. சிங்கம் புலிக்கு இடையில் மாட்டிக் கொண்ட எலி கதையானது குலேபகாவலி வசூல்
குறைவான தியேட்டர்களில் ரீலீஸ் ஆன இப்படத்தை பார்க்க வந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. நகரங்களில் மூன்று இலக்கங்களிலும் பிற இடங்களில் இரட்டை இலக்கங்களிலுமே டிக்கட் விற்பனையானது. நேற்று ஒரு நாள்தமிழ் நாடு மொத்த வசூல் ரூ 30 லட்சம்.

அடுத்த மூன்று நாட்கள்
நேற்று வெளியான மூன்று படங்களின் வசூல் ஏற்ற இறக்கங்களை திங்கட்கிழமைக்கு பின்னரே அனுமானிக்க முடியும். தற்போதைய நிலவர படி முதல் இடத்தில் தானா சேர்ந்த கூட்டம், இரண்டாம் இடத்தில் ஸ்கெட்ச், மூன்றாம் இடத்தில் 'குலேபகாவலி' உள்ளது.
-இராமானுஜம்


Click it and Unblock the Notifications











