பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ்: உலகம் முழுவதும் 500 கோடி வசூலை நெருங்கும் சோழர் படை!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கி வருகிறது.
பொன்னியின் செல்வன் வெளியாகி 12 நாட்களில் தமிழில் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொடரும் சாதனை
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது 400 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முக்கியமாக இந்தியில் 'விக்ரம்' படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துவிட்டதாம்.

உலக நாடுகளில்
அமெரிக்காவில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் டாப்பில் இருக்கும். 2019ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. இந்தப் படம் தற்போது 17 கோடி வசூலை கடந்து 50 கோடியை நெறுங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் அதிகம் வசூல் செய்த படத்தின் லிஸ்ட்டில் பொன்னியின் செல்வன் தான் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்னும் குறையவில்லை
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட பொன்னியின் செல்வன் வெளியான அனைத்து ஏரியாக்களிலும், ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் தீபாவளி வரை பொன்னியின் செல்வனின் வசூல் குறைய வாய்ப்பே இல்லை எனவும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வாரம் இறுதிக்குள் 500 கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் எட்டிப் பிடிக்கும் என சொல்லப்படுகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பொன்னியின் செல்வனில், ஏஆர் ரஹ்மானின் இசை பெரிய பலமாக அமைந்துள்ளது.

இரண்டாம் பாகம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பால் உற்சாகமாகியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு, இரண்டாம் பாகத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இப்போதே போஸ்ட் புரொடக்ஷன், பின்னணி இசை ஆகிய பணிகள் தொடங்கிவிட்டதாம். அதனால், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு 'பொன்னியின் செல்வன்' 2ம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











