வெளியானது பொன்னி நதி.. பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. எப்படி இருக்குன்னு பாருங்க!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
வீராணம் ஏரிக்கரையை வந்தியத்தேவன் ரசித்துப் பார்க்கும் பிரம்மாண்ட காட்சியைத் தான் கல்கி தனது பொன்னியின் செல்வன் கதையில் எழுதியிருப்பார்.
இந்நிலையில், முதல் பாடலான பொன்னி நதி பாடலும் வந்தியத்தேவன் வருகைத் தரும் அறிமுக பாடலாகவே உருவாகி உள்ளது.

பொன்னி நதி
எம்ஜிஆர், கமல், ராஜமெளலி உள்ளிட்ட பலர் இயக்கத் துடித்த பொன்னியின் செல்வன் காவியத்தை படமாக இயக்கி சாதனை படைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்களான அஸ்வின், சஞ்சு சாம்சன் மற்றும் பிவி சிந்து உள்ளிட்டோர் ட்விட்டரில் தற்போது இந்த பாடலை பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

வந்தியத்தேவன் இன்ட்ரோ
நடிகர் கார்த்தி இந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவர் சோழ தேசத்துக்கு வரும் வழியில் பிரம்மாண்ட வீரநாராயணன் ஏரியையும் அதில் அழகாக ஓடும் பொன்னி நதியையும் கண்டு ரசிக்கும் போது வரும் ஓப்பனிங் பாடலாகவே இந்த பொன்னி நதி பாடல் இடம்பெற்றுள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் குரலில்
இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைத்ததோடு மட்டுமல்லாமல் பழங்காலத்து குரலில் அவரே பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இந்த பாடலுக்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தமிழர்கள் மற்றும் சோழர்களின் பெருமையை கலந்த வரிகளை கொண்டு அழகு சேர்த்துள்ளார். டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் இசை விண்ணைப் பிளக்கின்றன.

எக்ஸ்பிரஸ் அவென்யூவில்
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் தற்போது பிரம்மாண்டமாக பொன்னி நதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. அதற்கான பிரத்யேக செட் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவங்களை மக்கள் முன்னிலையில், எடுத்துக் கூறி வருவதை பலரும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











