இழுபறியில் பொன்னியின் செல்வன் தமிழக விநியோக உரிமை..யாருக்கு வாய்ப்பு? ரிலீசுக்கு 2 வாரமே உள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக உரிமை இன்னும் இழுபறியிலேயே உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க இயக்குநர் மணிரத்னம் குறிப்பிட்ட சதவீதம் லாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
தமிழக விநியோக உரிமை ரெட்ஜெயண்ட் நிறுவனம் எடுக்க வாய்ப்பு என்று பேசப்பட்ட நிலையில் அது இழுபறியில் உள்ளது.

எதிர்ப்பார்ப்புடன் வரும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்படமாக வருகிறது, இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா நடிக்கின்றனர், முன்னணி நடிகர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறார் என்ற தகவலால் தமிழ் திரையுலகமே பரபரப்பானது. திரையுலகினர் மட்டுமல்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் எதிர்பார்த்தனர். காரணம் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க கமல்ஹாசன் பெரிதும் முயற்சி எடுத்தார். ஆனால் முடியவில்லை.

தொழில் நுட்ப வளர்ச்சி சாத்தியமான வெற்றி
எம்ஜிஆர் தான் நேரடியாக கல்கியிடம் கதை உரிமையை வாங்கி படமெடுக்க முயற்சித்தார். ஆனால் அது நடக்கவே இல்லை. மணிரத்னத்தை வைத்து படத்தை தயாரிக்க கமல்ஹாசன் பட்ஜெட் உட்பட தயார் செய்து வைத்திருந்தும் முடியவில்லை. இறுதியாக 70 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் அது சாத்தியமானது. வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக பெரிய செட்டுகள் போடவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால் அது சாத்தியமாயிற்று.

விக்ரம் வெற்றியில் ரெட் ஜெயன்ட் பங்கு
பொன்னியின் செல்வன் செப்.30 அன்று வெளியாவதாக அறிவித்தனர். டீசர் வெளியீட்டு விழாவை சாதாரணமாக நடத்தினர். படம் தயாரித்து முடித்தாலும் அதை சந்தைக்கு கொண்டுவந்து வியாபாரம் செய்யும் கலை அறிந்தவர்கள் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினர். அவர்கள் பட விநியோக உரிமையை பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்ற மாநிலங்கள் ஓவர்சீஸ் விநியோகம் இறுதிப்படுத்தப்பட்டாலும் தமிழக உரிமை மட்டும் இறுதிப்படுத்தவில்லை. விக்ரம் பட வெற்றிக்கு படத்தின் கலைஞர்கள், படமாக்கப்பட்டவிடம் ஒரு காரணம் என்றால் சமூக வலைதளம் விளம்பரம் மூலம் பூஸ் செய்து விட்டது படத்தை வாங்கிய ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனலாம்.

விளம்பரம் சரியா போகலையே வருத்தப்படும் நெட்டிசன்கள்
மணி ரத்னத்துக்காக படம் ஓடும் என நம்புவது ஒரு பக்கம் இருந்தாலும் படம் சரித்திர கால கதை, படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்கிற ஐயம், பாடல்கள் அவ்வளவாக (ஒரிரு பாடல் தவிர) பேசப்படவில்லை. படத்தை ப்ரமோஷன் செய்கிறேன் என்று அதே கேரக்டராக மாறி ட்விட்டரில் பெயர் மாற்றி நடிகர்கள் பேசுவது (யார் கொடுத்த ஐடியாவோ) அந்தந்த பதிவின் கீழேயே நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது, இன்னும் 15 நாள் தான் இருக்கிறது நான் வேண்டுமானால் வீடு வீடாக போய் கதவை தட்டி சொல்லவா என ஒரு ரசிகர் பொங்கியிருந்தார். இதற்கெல்லாம் காரணம் படத்தை விளம்பரப்படுத்துவது யார் என்கிற குழப்பமே. படத்தின் தமிழக விநியோக உரிமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

நீடிக்கும் இழுபறி கவலையில் ரசிகர்கள்
லைகா எதிர்ப்பார்ப்பதை விட ரெட் ஜெயண்ட் குறைவாக கேட்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் மணி ரத்னம் 30/70 என ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை அவுட்ரேட்டட் முறையில் விற்று ரிஸ்க் இல்லாமல் இருக்கலாம் என அவர் கூறுவதாக தெரிகிறது. இதனால் இதுவரை தமிழக உரிமை இழுபறியாக உள்ளது. பெரும் பொருட் செலவில், பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வரும் படம் விளம்பரம் இல்லாமல் ஓடாமல் போய்விடக்கூடாதே என ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால் ரிலீசுக்கு இன்னும் 11 நாட்களே இடையில் உள்ள நிலையில் இழுபறி நீடிப்பதால் பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவே எதையும் தீர்மானிக்க போகிறது.


Click it and Unblock the Notifications











