சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பூஜா ஹெக்டே.. பரபரக்கும் தகவல்கள்.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 திரைப்படம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக வாடி வாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்தால், அதற்கு முன்னதாக இன்னொரு படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்கிற ஸ்ட்ராங்கான தகவல்கள் உலா வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
மேலும், அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

ஆஸ்கர் உறுப்பினர்
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என இரு படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றன. சூரரைப்போற்று படத்தை விட ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் குழுவினர் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தன. நாமினேஷனில் நிச்சயம் இடம்பெறும் என சில ஹாலிவுட் பிரபலங்களே சொன்ன நிலையில், கடைசியில் இடம் பெறாமல் போய் விட்டது. ஆனால், தற்போது ஆஸ்கர் குழுவின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை சூர்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாலா படம்
நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடித்து வருகிறார். கன்னியாகுமரியில் அந்த படத்தின் பெருவாரியான சூட்டிங் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறுகின்றனர். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.

வாடிவாசல் எப்போ
பாலா படத்தை முடித்தவுடன் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் இப்போதைக்கு ஆரம்பிக்காது என வெளியாகி உள்ள தகவல்கள் வருத்தத்தை அளித்துள்ளன. பாலா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே வாடிவாசல் படத்திற்கான ஒத்திகைகள் எல்லாம் பிரம்மாண்டமாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை துவங்குவதற்கு முன்பாக இன்னொரு இயக்குநர் படத்தில் சூர்யா நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில்
தம்பி கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சிறுத்தை சிவா இயக்கத்தில் எப்பவோ சூர்யா நடிக்க வேண்டியது. ஆனால், அதற்கான காலம் தற்போது தான் வந்துள்ளது என்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யா நடித்து முடித்து விட்டு பின்னர் தான் வாடிவாசலில் தீவிரமாக இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூஜா ஹெக்டே
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்திற்கு ராஷ்மிகா மந்தனாவா? பூஜா ஹெக்டேவா? யாரை ஃபிக்ஸ் பண்ணலாம் என்கிற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விரைவில் சூர்யா 42 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











