தொடரி... இப்படி ஒரு படம் வர்றதே ரசிகர்களுக்குத் தெரியலையோ?
ஓரளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு துவக்க நாள் வரவேற்பு என்பது மிக முக்கியம். வியாழன் அல்லது வெள்ளியன்று வெளியாகும் ஒரு படத்துக்கு, அந்த வார இறுதி வரை 50 முதல் 80 சதவீத இருக்கைகள் நிரம்பினால், ஓரளவு தேறிவிடும்.
ஓரளவு பிரபல நடிகர்களின் படங்களுக்கு சென்னையில் பெரும்பாலும் திருப்தியான வசூல் கிடைத்துவிடும். தனுஷ் போன்றவர்களெல்லாம் அந்தப் பட்டியலில் உள்ள நடிகர்கள்.

அவரது சுமார் படம் எனப்பட்ட மாரிக்குக் கூட துவக்க வார வசூல் நன்றாகவே இருந்தது.
ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் என மீடியாக்களால் ஏகத்துக்கும் ஏத்திவிடப்பட்ட தொடரியின் தொடக்க நாளில் ரசிகர்களின் வருகையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

என்னதான் டுபாக்கூர் படமாகவே இருந்தாலும் சீட்டுகள் நிரம்பும் சென்னையின் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் இன்று காலைக் காட்சிக்கு அதாவது முதல் காட்சிக்கு 20 பேர் கூட வரவில்லை என்பது அதிர்ச்சித் தகவல்.

மாயாஜால் போன்ற அரங்குகளில் பிற்பகல் காட்சிகளுக்கு பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை.
இதற்குக் காரணம், ஒரு நாள் முன்பாகவே படம் வெளியாகியிருப்பது. அடுத்து, இப்படி ஒரு படம் வருவதே மீடியா தவிர, ரசிகர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் போனதுதான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில்.

சென்னையிலேயே இந்த நிலை என்றால், தாம்பரம் தாண்டி உள்ள பகுதிகளில் எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.
பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்துக்கும் அதே நிலைமை வந்துவிடுமா... அல்லது வெள்ளி, சனி, ஞாயிறில் படம் பிக்கப் ஆகிவிடுமா.. பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











