”நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன், தனது 90-வது வயதில் காலமானார். சென்னை, பூவிருந்தவல்லியில் வசித்து வந்த இவர், இன்று மாலை 5.45 மணியளவில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.
திரையுலகம் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளுக்காகப் பெரிதும் அறியப்பட்ட பூவை செங்குட்டுவன், சுமார் ஆயிரம் திரையிசைப் பாடல்களையும், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திரமான பாடல்களையும், ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது கலைச் சேவைகளைப் பாராட்டி, 1980 ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

அவர் எழுதிய "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..." மற்றும் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..." போன்ற திரையிசைப் பாடல்கள் காலத்தால் அழியாத புகழ் பெற்றவை. குறிப்பாக, "நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்..." என்ற பாடல், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்தபோது, இலங்கை வானொலியில் நாள் முழுவதும் ஒலிபரப்பப்பட்டு சாதனை படைத்தது.
பாடல்கள் மட்டுமல்லாமல், பல நாட்டிய நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார். தமிழகத்தின் ஐந்து முக்கிய முதல்வர்களுக்காகப் பாடல் எழுதிய பெருமையும் இவருக்குண்டு. அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது, "அறிஞர் அண்ணா ஆட்சிதானிது" என்ற இவரது பாடல் பொதுக்கூட்டங்களில் பரவலாக ஒலிபரப்பப்பட்டது.
கலைஞர் கருணாநிதிக்காக "கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்" என்ற பாடலையும், எம்.ஜி.ஆருக்காக "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடலையும் இவர் எழுதினார். மேலும், ஜெயலலிதா முதன்முதலில் பாடிய இரண்டு அம்மன் பாடல்களையும் எழுதியவர் பூவை செங்குட்டுவன். தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பல நாடகங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











