'பாகுபலியை தமிழில் தந்ததற்காகவே ராஜமவுலிக்கு ஒரு ராயல் சல்யூட்!'
சரித்திர, புராண கதைகள் தமிழ், தெலுங்கு சினிமாவுக்குப் புதிதல்ல. இந்த இரு மொழிகளின் ஆரம்ப காலப் படங்கள் அனைத்துமே ராஜா ராணி அல்லது சாமி கதைகள்தான்.
அந்தக் காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பு வசதிகளைக் கொண்டு வரலாற்றுக் கதைகளை தத்ரூபமாகத் தந்தார்கள் அன்றைய இயக்குநர்கள். பாதாள பைரவியும், மாயா பஜாரும், சந்திரலேகாவும், நாடோடி மன்னனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ஆயிரத்தில் ஒருவனும்... மறக்கக் கூடிய சரித்திரப் படங்களா இவையெல்லாம்!

அந்த நேர்த்தி வருமா...
பின்னர் சமூகக் கதைக் களத்துக்கு இடம்பெயர்ந்தது சினிமா. க்ரைம், ஆக்ஷன், காமெடி, த்ரில்லர், ஹாரர் என பல்வேறு தளங்களில் பயணித்த சினிமாவில், எப்போதாவது ஒரு சரித்திர அல்லது புராணப் படம் வரும். ஆனால் அதில் அன்றைய சினிமாவில் பார்த்த செய்நேர்த்தி இருக்காது.

ஜோதா அக்பர்
இப்போது மீண்டும் இந்திய வரலாற்றில் புதைந்துள்ள மாபெரும் சரித்திர சம்பவங்களை, மிக நேர்த்தியுடன் படமாக்கி வருகிறார்கள். அப்படி வந்த படங்களில் இதுவரை முதலிடத்தில் இருந்தது ஜோதா அக்பர். அக்பர் கால இந்தியாவை கண்முன் கொண்டு வர அப்படி மெனக்கெட்டிருந்தனர். அதற்கான பலனும் அந்தப் படத்துக்குக் கிட்டியது.

அதையும் தாண்டி
இப்போது அந்தப் படத்தையும் மிஞ்சி நிற்கிறது பாகுபலி. அதுவும் நேரடித் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன்.

தமிழரின் அடையாளத்துடன்
இந்தப் படத்தில் வரும் நாட்டுக்குப் பெயர் மகிழ்மதி. ராணி சிவகாமிதேவி. வரையறைகளைத் தாண்டிய ஒரு கால வெளியில் நடக்கும் கதை. பனிமலைகளும், சிலிர்ப்பூட்டும் அருவிகளும், தமிழரின் அடையாளங்களுள் ஒன்றான பனை மரங்கள் நிறைந்த நெடிய வறண்ட சமவெளிகளும் கொண்ட ஒரு புதிய தேசத்தில் நடக்கும் கதை.

தமிழ் பேசி...
இந்தப் படம் இரண்டு மொழிகளில் தனித்தனியாக எடுக்கப்பட்டிருக்கிறது. அத்தனைப் பாத்திரங்களும் சொந்தக் குரலில் தமிழ் பேசியுள்ளன. தூய தமிழ் வசனங்கள்..

ராயல் சல்யூட்
இன்று உலக சினிமாவே இந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமையில் தமிழ் சினிமாவையும் பங்கு கொள்ள வைத்த இயக்குநர் ராஜமவுலிக்கு தமிழ் சினிமாவே 'ராஜ வணக்கம்' வைக்கிறது!


Click it and Unblock the Notifications











