60 வயசுக்கு மேல ஆன பணக்காரங்க தான் வாழ்க்கையை என்ஜாய் பண்றாங்க: ராஜ்கிரண் எக்ஸ்க்ளுசிவ்
பவர் பாண்டி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரன் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்துள்ளார். அதில் பலவிஷ்யங்கள் குறித்து நேர்மையாகப் பேசியுள்ளார்.
சென்னை: தனுஷ், இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் 'பவர்' பாண்டி திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண் 'ஒன் இந்தியா தமிழ்' வாசர்களுக்காக பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். சமூகத்துக்கு நல்லது சொல்லும் திரைப்படங்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன் என ராஜ்கிரண் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்கிரண், தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

'' 27 வருடங்களுக்கு முன்பு, தனுஷுன் அப்பா கஸ்தூரி ராஜா என்னை 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவரது மகன் தனுஷ் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
நான் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும்போது, அந்த படத்தால் இந்த சமூகத்துக்கு நல்ல செய்திகள் உள்ளதா என்பதை மனதில் வைத்தே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். அப்படி தேர்ந்தெடுத்த படமே பவர் பாண்டி.
பவர் பாண்டி முதியவர்களைப் பற்றி பேசுகிற படம். நம் சமூகத்தில் ஒருவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவரை ஒரு உதவாத பொருளாகத்தான் பார்க்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம் பவர் பாண்டி.
நமது அரசாங்கமே, ஒருவருக்கு 58 வயதாகிவிட்டால் அவர்களை முதியவர்கள் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகிறது. ஆனால் பெரிய தொழில் அதிபர்கள், கல்வி தந்தைகள், சாராய ஆலை அதிபர்கள், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் எல்லாரும் 60 வயதுக்கு மேல்தான் இன்பமயமாக உள்ளார்கள்.
ஆனால் ஒரு நடுத்தரக் குடும்பத்திலோ, ஏழை குடும்பத்திலோ ஒருவர் திருமணமான பிறகு குடும்பத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே உழைக்கிறார்கள். குடும்பத்துக்காக உழைத்தவர்களை 60 வயதுக்கு மேல் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதுக்கி வைப்பதில் என்ன நியாயம்?
இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். இன்றைய முதியவர்கள் நேற்றைய இளைஞர்கள். இதை மறக்கக் கூடாது.
முதியவர்கள் தாங்கள் நன்றாக சம்பாதிக்கும் காலத்திலேயே உங்கள் முதுமை காலத்துக்கும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொள்ளுங்கள் - இவ்வாறு 'பவர் பாண்டி' ராஜ் கிரண் கூறினார்.


Click it and Unblock the Notifications











