விளம்பர உலகில் சூர்யா மற்றும் மகேஷ்பாபுவின் கடுமையான போட்டியாளராக மாறிய "பிரபாஸ்"
ஹைதராபாத்: விளம்பர உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய சூர்யா மற்றும் மகேஷ்பாபுவிற்கு தற்போது கடுமையான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாகுபலி நாயகன் பிரபாஸ்.
நடிகர்களைப் பொறுத்தவரை படங்களில் நடிப்பதை விட விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் தான் அதிகப் பேரையும் , புகழையும் அடைகின்றனர். இதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே விளம்பரங்களில் நடிக்க பிரபல நடிகர்கள் விரும்புகின்றனர்.
இதுநாள்வரை தமிழ் மற்றும் தெலுங்கு விளம்பரப் படங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்த மகேஷ்பாபு மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறார் பாகுபலி நாயகன் பிரபாஸ்.

பாகுபலி
தெலுங்கில் ஒரு இளம் நாயகன் என்ற அந்தஸ்தில் இருந்த பிரபாசை பாகுபலி திரைப்படம் உலகளவில் புகழ்பெற வைத்துவிட்டது. சுமார் 50 நாட்களுக்கும் மேலாக ஓடிய இத்திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இந்திய அளவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் 3 வது இடத்தைப் பெற்றிருக்கிறது பாகுபலி.

ஒரே படத்தில்
ஒரே கல்லில் 2 மாங்காய் என்று சொல்லுவார்கள் ஆனால் பிரபாசிற்கு இந்த ஒரே படத்தின் மூலம் எண்ணற்ற மாங்காய்கள் பரிசாகக் கிடைத்துள்ளன.பாகுபலியின் மூலம் உலகளவில் தெரிந்த நாயகன், டோலிவுட்டின் முன்னணி நாயகன், இந்திப் படங்களில் வாய்ப்பு, சம்பளம் உயர்வு மற்றும் குவியும் விளம்பரங்கள் என்று பிரபாஸ் இந்தப் படத்தின் மூலம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பரிசுகளைப் பெற்று வருகிறார்.

மகேஷ்பாபு
தெலுங்கு தேசத்தின் இளவரசன், டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் மகேஷ்பாபு, அதிகமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். பாரகன், தம்ஸ் அப், செல்கான், ஐடியா, டாடா ஸ்கை, டிவிஎஸ், ஜாய் ஆலுகாஸ், இன்டெக்ஸ் மற்றும் ஷாம்பூ விளம்பரங்கள் என்று ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபு விளம்பரத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் 25 கோடிகளை வருமானமாகப் பெறுகிறார்.

சூர்யா
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா மகேஷ்பாபுவிற்கு சற்றும் சளைத்தவரில்லை. ஏர்செல், சன்ரைஸ், குயிக்கர், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமென்ட், குளோஸ் அப், மலபார் கோல்டு, காம்ப்ளான், இன்டெக்ஸ் என்று சூர்யாவும் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

ஷாருக்கான்
ஹிந்தி உலகின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் இந்தியா முழுவதுமே அனைத்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சூர்யா மற்றும் மகேஷ்பாபுவை ஒப்பிடும்போது ஷாருக்கானின் விளம்பரங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் அதிகம்.

விளம்பர உலகில் கால் பதிக்கும் பிரபாஸ்
தற்போது விளம்பர உலகில் பிரபாசை நடிக்க வைக்க அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. மேலும் இந்தியா முழுவதும் பிரபாஸின் முகம் நன்கு பரிச்சயமாகி விட்டதால் அனைத்து விளம்பரங்களிலும் பிரபாசை நடிக்க வைக்க பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னோட்டமாக மஹேந்திரா TUV300 கார் விளம்பரத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை மஹேந்திரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும்
சூர்யா, மகேஷ்பாபு போன்ற தென்னிந்திய நடிகர்கள் மட்டுமின்றி சல்மான், ஷாருக்கான் போன்ற ஹிந்தி நடிகர்களுக்கும் விளம்பர உலகில் கடுமையான போட்டியாளராக பிரபாஸ் மாறிக் கொண்டிருக்கிறார். இதனை எப்படி எதிர்கொள்வது என்று சகநடிகர்கள் யோசிக்கும் அளவிற்கு பிரபாஸின் வளர்ச்சி இருக்கிறதாம்.
பாகுபலிக்கே இப்படியா அப்ப பாகுபலி 2 வந்தா?


Click it and Unblock the Notifications











