பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா?
பிரபு, பிரபுதேவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள சார்லி சாப்ளின் 2 படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை : பத்திரிகையாளர்களை பார்த்தாலே தனக்கு பயமாக இருப்பதாக நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சார்லி சாப்லின். ஷக்தி சிதம்பரம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
17 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. பிரபு, பிரபுதேவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஷக்தி சிதம்பரம் தான் இயக்கியிருக்கிறார். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.
சார்லி சாப்ளின் 2 படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரபுதேவா, செய்தியாளர்களை பார்க்கவே தனக்கு பயமாக இருக்கிறது என்றார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,

செய்தியாளர்களை பார்த்தாலே பயம்
"செய்தியாளர்களை பார்க்கும் போது, பள்ளி ஆசிரியரை பார்க்கும் போது ஏற்படும் பயம்தான் எனக்கு உருவாகிறது. எங்கே பொய் சொன்னால் மாட்டி விடுவோமோ என்ற பயம் உண்டாகிறது.

டிஜிட்டல் மீடியா
பத்திரிகையாளர்களை தனித்தனியாக பார்க்கும் போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கும்பலாக பார்க்கும் போது தான் அந்த உணர்வு வருகிறது. தற்போது டிஜிட்டல் மீடியா வந்துவிட்டதால், பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எல்லோருமே சிறப்பாக செயல்படுகிறீர்கள்.

பாராட்டும் போது சந்தோஷம்
எனது படத்தை பாராட்டும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் திட்டும்போது வருத்தமாக இருக்கும். மற்ற படங்களை திட்டும்போது சந்தோஷப்படுவேன். அதனால் எனது படங்களை திட்டும்போதும் வருத்தப்படக் கூடாது என நினைப்பேன்.

சார்லி சாப்ளின் 2 படம்
சார்லி சாப்ளின் 2 படம் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்வீர்கள். மற்றபடி இந்த படத்தில் வேலை பார்த்தது ஒரு சுகமான பயணம். அதனால் தான் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக வேண்டும் என விரும்புகிறோம்", என பிரபுதேவா கூறினார்.


Click it and Unblock the Notifications











