கோமாளி படத்திற்காக எனக்கு பரீட்சை வைத்த பிரபுதேவா... லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் சுவாரசிய பேட்டி
சென்னை: கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் லவ் டுடே என்கிற திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ராதிகா சரத் குமார் மற்றும் இவானா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கோமாளி திரைப்படத்திற்காக பிரபுதேவா தனக்கு டெஸ்ட் வைத்ததாக பிரதீப் கூறியுள்ளார்.

லவ் டுடே
அப்பா லாக் என்கிற குறும்படத்தை எடுத்து அதில் வெற்றியைக் கண்ட பிரதீப் தற்சமயம் அதை திரைப்படமாக எடுத்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் மூலம் அறிமுகமாகும் முதல் கதாநாயகன் பிரதீப் தானாம். சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

தத்துவப் பேச்சு
சமீபத்தில் ஒரு விழாவில் பிரதீப் பேசிய பதிவு ஒன்று ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது. நிறைய நபர்கள் அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டசாக வைக்கும் அளவிற்கு தத்துவ பேச்சை பேசியிருப்பார் பிரதீப். இப்போது கூட, எந்தக் காரணத்தினால் நடிகனானீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு நம்முடைய ஆசையை நாம்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், அப்படி நடித்ததால்தான் இப்போது மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்கவும் எனக்கு அழைப்பு வந்துள்ளது என பிரதீப் கூறியுள்ளார்.

சிபாரிசு கிடையாது
கோமாளி திரைப்படம் வெற்றியடைந்த பின்னர் பெரிய கதாநாயகனை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு வந்தாலும் தன்னுடைய கதையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையும் அல்லது அந்த கதாநாயகர்களுக்காக புதிதாக ஒரு கதை எழுத வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். நான் துணை இயக்குநராக வாய்ப்பு கேட்டு அலைந்தபோது சிபாரிசு இல்லாததால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதனால், இப்போது தயாரிப்பாளரே சிபாரிசு செய்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை. முறையாக எனக்கு விண்ணப்பம் அனுப்பிய நபர்களிலிருந்து தேர்வு செய்து 10 துணை இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

பிரபுதேவாவின் பரிட்சை
கோமாளி திரைப்படத்தின் கதையை எழுதியபோது முதலில் அதில் பிரபுதேவாவை நடிக்க வைக்கத்தான் விருப்பப்பட்டேன். அப்போது வேல்ஸ் நிறுவனமும் பிரபுதேவா அவர்களும் இணைந்து படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். பிரபுதேவா அவர்கள் என்னை ஒரு காட்சியை மட்டும் படம்பிடித்து எடுத்து வரச் சொல்லி பரீட்சை வைத்தார். அப்படி நான் ஷூட் செய்த காட்சியும் அவருக்கு பிடித்திருந்தது. இருப்பினும் சில காரணங்களால் அந்தப் படம் அவருடைய நடிப்பில் உருவாகாமல் பின் ஜெயம் ரவி நடிப்பில் உருவானது என்று பிரதீப் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











