அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்?- பிரபு
அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும், என்றார் நடிகர் பிரபு.
நேற்று நடந்த அசுரகுலம் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு பேசுகையில், "நான் 1978-ல் 'திரிசூலம்' படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல், ஜெயமணி இருவரும்தான் டூப் போடுவார்கள். இவர்களிடயே உயரமாக இன்னொருவர் இருப்பார் அவர்தான் பெப்ஸி விஜயன். அப்போது அப்பா கூட இவர் வேலை செய்வதைப் பார்த்து 'இவன் பெரிய ரவுண்ட் வருவான்' என்று பாராட்டுவார்.

மாஸ்டராக இவருக்கும் எனக்கும் 'சங்கிலி' முதல்படம். அந்தப் படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் 25 போடு போட்டார். இது பற்றிக் கேட்ட போது அப்பா சொன்னார் 'இவன் படுத்திய பாடு தாங்காமல் போட்டேன்.. இதுதான் சமயம் போடுவதற்கு' என்றார்.
அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.
இந்த சபரிஷின் அப்பா கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்து உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எ.ஸ்.தாணு பேசும் போது, "தம்பி சபரிஷ் திரையுலகைக் காக்கவந்த குலவிளக்காக வலம் வருவார். இவர் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகராகத் தெரிகிறார், வெற்றி வலம் வருவார். நல்ல படத்துக்கான கதைக் களத்துடன் இந்தப் படம் இருக்கிறது. படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்,'' என்றார்.

எல்லா மகன்களுக்கும் அப்பாதான் ஹீரோ - சந்தானம்
நடிகர் சந்தானம் பேசும் போது, ''இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே 'மார்க்கண்டேயன்' படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். 'மார்க்கண்டேயன்' படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின்சாரம், ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.
பத்து மாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல் மாடல் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகைப் பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்,'' என்றார்.
இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் பேசும்போது, "தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பது அந்தக்காலம். இப்போது தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 64 அடிபாயும். பெப்ஸி விஜயன் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார் அவரால் டூயட் பாட முடியாது. எனவே தன் மகனை டூயட் பாட வைத்திருக்கிறார். சபரிஷுக்கு யாருடைய சாயலும் இல்லாத முகம். யார் சாயலும் இல்லாத நடிப்பு. நாயகி வித்யாவும் புதியவராக இருக்கிறார். கண்டிப்பாக சபரிஷுடன் இணைந்து படம் செய்வேன்,'' என்று கூறி வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











