கிறிஸ்தவ மதப் பிரசார படமா செம்பி? இயக்குநர் பிரபு சாலமனை விளாசிய பத்திரிகையாளர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் உருவாகி உள்ள செம்பி படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பிரஷ் ஷோவில் இயக்குநர் பிரபு சாலமனிடம் பத்திரிகையாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செம்பி படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன் கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்கிறாரா என சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதற்கு காரணம் செம்பி படத்தில் பைபிளில் இருந்து இடம்பெற்ற ஒரு வாசகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு சாலமனின் செம்பி
மைனா, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி உள்ள செம்பி படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிகை கோவை சரளா நடித்துள்ளார். குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் இந்த படத்தில் நடித்துள்ளார். அதன் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது.

வெடித்த சர்ச்சை
படத்தின் இறுதியில் இடம்பெற்ற பைபிள் வாசகம் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த படத்தின் மூலம் கிறிஸ்துவத்தை பரப்புகின்றீர்களா என இயக்குநர் பிரபு சாலமனை பார்த்து சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப அந்த இடமே களேபரமாக காட்சியளித்தது. அதற்கு பிரபு சாலமன் கொடுத்த விளக்கம் மேலும், ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பி விட்டது.

கிறிஸ்துவம் மதமே இல்லை
தான் எதை பின்பற்றுகிறேனோ அதைத்தான் தனது படத்தின் இறுதியில் வைத்துள்ளேன் என பேசிய பிரபு சாலமனிடம் அதே போல நல்ல கருத்துக்கள் பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து புனித நூல்களிலுமே உள்ள நிலையில், பைபிள் வாசகத்தை குறிப்பிடக் காரணம் என்ன? என்கிற கேள்வி எழுந்ததும். உடனடியாக அதற்கு பதிலளித்த பிரபு சாலமன் கிறிஸ்தவம் ஒரு மதமே கிடையாது. அது வாழ்வின் வெளிப்பாடு என பேச ஆரம்பித்ததும் மேலும் பிரச்சனையை பெரிதாக்கியது.

பைபிள் வாசகம்
செம்பி படத்தின் முடிவில் அன்பு குறித்து பைபிளில் இடம்பெற்ற ஒரு வாசகத்தை இயக்குநர் பிரபு சாலமன் குறிப்பிட்டது தான் சர்ச்சைக்கு காரணமாக மாறியது. அதில், "உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து - இயேசு" என இயேசு பெயரின் குறிப்பிட்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறி உள்ளது. இந்த படத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற எதிர்ப்புகளும் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











