கொரோனா அச்சுறுத்தல்... தள்ளிப் போகிறது பிரபு சாலமனின் காடன் ரிலீஸ்... ஈராஸ் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: பிரபு சாலமனின் காடன் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழில், கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல், தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர், பிரபு சாலமன்.
இவர் அடுத்து கும்கி 2, காடன் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வந்தார். காடன் படம் மூன்று மொழிகளில் உருவாகிறது.

ஹாத்தி மேரே சாத்தி
இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகிறது. 1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கிய படம், ஹாத்தி மேரே சாத்தி. எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில், நல்ல நேரம் என்று ரீமேக் செய்யப்பட்டது.

ராணா, விஷ்ணு
யானையை மையப்படுத்திய கதை என்பதால், இந்த டைட்டிலை அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இதில் ராணா ஹீரோ. விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரியா பிலோன்கர், புல்கிட் சாம்ராட், ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

யானைகளுடன் 25 நாட்கள்
தொடர்ந்து நடந்து வந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்துள்ளது. தாய்லாந்து காடுகளில் யானைகளுடன் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதோடு மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த 'கும்கி படத்துக்கு பிறகு யானையை மையமாக வைத்து பிரபு சாலமன் மீண்டும் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு
இந்தப் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில படங்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











