இரண்டு கோடி செலவில் கபாலிக்காக தயாராகும் பிரசாத் லேப் தியேட்டர்... எல்லாம் 'கல்யாண மாயம்'!
கல்யாணம்... சினிமா, மீடியா உலகிலும் சரி, விவிஐபி வட்டத்திலும் சரி.. இவரைத் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஒரு இடத்தில் கல்யாணம் இருக்கிறார் என்று அங்கு 'பர்பெக்ஷனுக்கு கியாரண்டி' என்பார்கள்.
ஆனந்த் தியேட்டர் கல்யாணமாக அறியப்பட்டு, குட்லக் கல்யாணமாகி, பின்னர் அது போர் ஃபிரேம்ஸ் ஆனபோது 'ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம்' எனப் பிரபலமடைந்தார். இப்போது பிரசாத் லேப் மற்றும் பிரிவியூ அரங்குகளுக்குப் பொறுப்பாளராக வந்திருக்கிறார்.

கருணாநிதி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என விவிஐப்பிகளுக்கு கல்யாணம் பொறுப்பில் உள்ள அரங்கில் படம் பார்ப்பதில்தான் ஏக விருப்பம். காரணம் அவர்கள் வசதியறிந்து செயல்படுவதில் கல்யாணத்துக்கு நிகரில்லை.
பிரசாத் லேபுக்கு வந்த கையோடு, முதல் வேலையாக அங்குள்ள தியேட்டரை அப்படியே முழுசாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளார். அவர் கேட்ட அனைத்துக்கும் ஒப்புக் கொண்டது பிரசாத் நிர்வாகி சாய் பிரசாத்.
மொத்தம் இரண்டு கோடி செலவில், இந்தியாவிலேயே எந்த ஒரு தியேட்டரிலும் இல்லாத வசதிகளை பிரசாத் லேப் தியேட்டரில் செய்து வருகிறார் கல்யாணம். அதுவும் நம்ப முடியாத வேகத்தில். வேலை வேலை என்று பம்பரமாகச் சுழன்றதில் மனிதர் இரண்டு கிலோ குறைந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கிய தியேட்டர் வேலைகள், இதோ இன்னும் ஓரிரு நாட்களில் பூர்த்தியாகப் போகின்றன. ரஜினியின் கபாலிதான் புதுப்பிக்கப்பட்ட, அதி நவீன பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்படும் முதல் படம் என்பதில் கல்யாணத்துக்கு கூடுதல் மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











