3 வருடமாக இழுத்தடித்த செக் மோசடி வழக்கிலிருந்து பிரீத்தி ஜிந்தா விடுதலை!
மும்பை: செக் மோசடி வழக்கில் நடிகை பிரீத்தி ஜிந்தாவை விடுதலை செய்து, மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நடிகையான பிரீத்தி ஜிந்தா மீது காசோலை மோசடி வழக்கை, எழுத்தாளர் அப்பாஸ் டயர்வாலா என்பவர் கடந்த 2013 ம் ஆண்டு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பிரீத்தி ஜிந்தா மீது மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
2013 ம் ஆண்டு பிரீத்தி ஜிந்தா சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'இஷ்க் இன் பாரிஸ்'. இதில் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய எழுத்தாளர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு ரூ 18.9 லட்சத்திற்கான காசோலை ஒன்றை பிரீத்தி வழங்கியிருந்தார்.
அப்பாஸ் டயர்வாலாவுக்கு, பிரீத்தி கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லை என்று திரும்பி விட்டது. இதையடுத்து அப்பாஸ், பிரீத்தி ஜிந்தா மீது காசோலை மோசடி வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 வருடமாக இழுபறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று பிரீத்தியின் வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் பிரீத்தி ஜிந்தா வழங்கிய காசோலையை அவருக்கு தெரிவிக்காமல், அப்பாஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றதாக வாதாடினார். ஹிதேஷ் ஜெயினின் வாதத்தை ஏற்றுக்கொண்ட அந்தேரி நீதிமன்றம், பிரீத்தி ஜிந்தாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியது. 3 வருடங்களாக இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











