ப்ரேமம் பட விவகாரம்: கேரள தியேட்டர்கள் நாளை மறுநாள் ஸ்ட்ரைக்!
மலையாளத்தில் பிரேமம் படத்தை ரிலீசுக்கு முன்பே திருட்டு வீடியோவாக வெளியிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் கேரளாவில் தியேட்டர்களை மூடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இளம் நடிகர் நவீன் பாலி நடித்த 'பிரேமம்' என்ற மலையாள படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்டர்நெட்டில்
காதலை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டது. இது மலையாள பட உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சென்சார் காப்பி
இன்டர்நெட்டில் வெளியான 'பிரேமம்' படத்தின் பிரதியில் 'சென்சார் போர்டு காப்பி' என்ற குறியீடும் உள்ளது. சென்சார் போர்டுக்கு அனுப்பிய பட பிரதியிலிருந்தே திருட்டுத்தனமாக இன்டர்நெட்டில் இந்த படம் வெளியானதால் அது பெரும் சர்சையை கிளப்பியது.

கண்டிப்பு
இதற்கிடையில் 'பிரேமம்' படம் பிரச்சனை மற்றும் கேரளாவில் பெருகி வரும் திருட்டு சி.டி.க்கள் பிரச்சனையை கண்டித்து கேரளாவில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

380 அரங்குகள்
அன்று காலை 9 மணிமுதல் மாநிலம் முழுவதும் உள்ள 380 தியேட்டர்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் பஷீர் கூறுகையில், "கேரளாவில் திருட்டு சி.டி. காரணமாக தியேட்டர்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றன. திருட்டு சி.டி. தயாரிப்பவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில் இன்டர்நெட்டில் புதிய திரைபடங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதன் மூலம் 70 சதவீத வருமானத்தை தியேட்டர்கள் இழக்கின்றன. எனவே இந்த பிரச்சனைக்கு அரசு முடிவுகட்ட கோரி போராட்டத்தில் குதிக்கிறோம்," என்றார்.

ப்ளஸ் ஒன் மாணவர்
இதற்கிடையில் 'பிரேமம்' படம் இன்டர்நெட்டில் வெளியானது தொடர்பாக திருட்டு சி.டி. ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கொல்லத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











