கணவனுக்காகக் தலையைக் கொய்துதரும் இளவரசி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை!
மும்பை : கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'பாஜிராவ் மஸ்தானி' படத்தில் காஷிபாயாக நடித்திருந்தார் ப்ரியங்கா சோப்ரா. சரித்திரப் புகழ்பெற்ற இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ப்ரியங்கா சோப்ராவுக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது.
'பாஜிராவ் மஸ்தானி' படத்தில் மஸ்தானி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'பாஜிராவ் மஸ்தானி' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பாராட்டுகளைப் பெற்ற ப்ரியங்கா சோப்ராவுக்கு மேலும் சரித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இளவரசி ஹதி ராணி :
ஹதா ராஜபுத்திரப் பகுதியைச் சேர்ந்த இளவரசி ஹதி ராணி. அவளை மேவாரின் சலூம்பர் எனும் பகுதிக்கு இளவரசரான ஒருவருக்கு மணமுடித்துத் தருகிறார்கள். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த நாட்டுக்கும், முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் படைகளுக்கும் இடையே பெரும் போர் மூள்கிறது.

போருக்குச் செல்லவேண்டும் :
திருமணமாகிச் சில நாட்களே ஆன நிலையில், இளவரசருக்கு போரில் தலைமையேற்க வேண்டிய கட்டாயம். அரைகுறை மனதுடன் போருக்கு ஆயத்தமான இளவரசன், 'நான் போருக்குச் சென்றுதான் ஆகவேண்டும். உன் பிரிவு என்னை வாட்டாமல் இருக்க ஏதாவது நினைவுப்பரிசு வேண்டும்' என ஹதி ராணியிடம் கேட்கிறார்.

ஹதி ராணியின் நினைவுப்பரிசு :
ராஜபுத்திரப் பெண்களும் வீரதீரச் செயல்களுக்குப் பெயர் போனவர்கள் என்பது வரலாறு. கணவன் தன் நினைவால் போர் புரிவதில் சுணக்கம் காட்டித் தோற்றுப் போவாரோ என்கிற அச்சத்தில் தனது தலையைக் கொய்து நினைவுப் பரிசாக அளித்து விடுகிறார்.

போரில் வெற்றி :
மனைவியின் நினைவுப் பரிசால் கலங்கிப் போன இளவரசர் பின்னர் அவரது தியாகத்தை உணர்ந்து அவரது தலையைக் கூந்தலால் கட்டித் தனது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு போர்க்களம் புகுகிறார். முகலாயப் படைகளைப் போரிட்டு வீழ்த்தி மேவார் வெல்கிறது.

இளவரசரும் வீரமரணம் :
ஆனால், மனைவி போனபின் வாழ்வதற்குப் பிரியமில்லாத இளவரசர் போர்க்களத்திலேயே மண்டியிட்டு தன் வாளால் தனது கழுத்தை வெட்டிக்கொண்டு வீரமரணம் அடைகிறார்.

ப்ரியங்கா சோப்ரா :
இந்தச் சரித்திரக் கதையில்தான் 'ஹதி ராணி' வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு சார்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், ப்ரியங்கா சோப்ரா இந்தக் கதையில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் :
தென்னிந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் இது குறித்த பேச்சுவார்த்தை சில இயக்குநர்களிடம் நடந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











