விட்ட இடத்தைப் பிடித்த ஏ எம் ரத்னம்... அடுத்தடுத்து புதுப்படங்கள்.. இளம் இயக்குநர்களுக்கு அழைப்பு!
ஏஎம் ரத்னம்... தொன்னூறுகளிலும் இரண்டாயிரத்தின் ஆரம்ப ஆண்டுகளிலும் தமிழ் சினிமாவில் கோலோச்சிய தயாரிப்பாளர்.
விஜயசாந்தியின் மேக்கப் மேனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், தயாரிப்பாளர், இயக்குநர் என பிரமாண்ட வளர்ச்சி பெற்றார்.
இவரது வைஜெயந்தி ஐபிஎஸ், இந்தியன், நட்புக்காக, குஷி, கில்லி, ரன், தூள், 7 ஜி ரெயின்போ காலனி, சிவகாசி போன்ற படங்களின் வெற்றியை தமிழ் சினிமா மறக்க முடியாது. தெலுங்கிலும் பெரிய வெற்றிப் படத் தயாரிப்பாளராக வலம் வந்தார். இரண்டு தெலுங்குப் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.

ஆனால் அவருக்கு மகன்கள் உருவில் சோதனை வந்தது. மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிய கேடி, இளையமகன் ரவி கிருஷ்ணா நடித்த பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரும் தோல்வியைத் தழுவின.
அடுத்து ஷங்கரை நம்பி ஏராளமான கோடிகளை பாய்ஸ் படத்தில் முதலீடு செய்தார். அந்தப் படமும் பெரும் தோல்வியைத் தழுவியது. தர்மபுரி, பீமா போன்ற படங்களும் தோல்வியைத் தழுவ, படத் தயாரிப்பையே நிறுத்திக் கொண்டார் ரத்னம். பெரும் கடன் சுமை வேறு. புகழ்பெற்ற தனது சூர்யா மூவீஸ் பேனரையும் தற்காலிகமாகக் கைவிட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கை கொடுத்தார் அஜீத். ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆரம்பம் படம் உருவானது. ஏஎம் ரத்னத்தின் பிரச்சினைகள் தீர்ந்தன. அடுத்து மீண்டும் அஜீத் கால்ஷீட் தர, என்னை அறிந்தால் படம் எடுத்தார். மூன்றாவது முறையாக அஜீத்தை வைத்து வேதாளம் படத்தை எடுத்துள்ளார்.
இப்போது எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து, பழைய ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் ஏ எம் ரத்னம். அடுத்து இளம் இயக்குநர்களை வைத்து புதிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
நானும் ரவுடிதான் பட டீமை வைத்து புதிய படம் தயாரிக்கிறார். மேலும் டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவுக்கும் ஒரு வாய்ப்பைத் தரவிருக்கிறார்.
அஜீத்தை வைத்து நான்காவது படம் தயாரிக்கவும் தயாராகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











