காலாவுக்கு சென்சார் கடிதம் தர வேண்டுமென்றே இழுத்தடித்ததா தயாரிப்பாளர் சங்கம்?
Recommended Video

சென்னை: ரஜினிகாந்தின் காலா படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தர வேண்டுமென்றே தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது.
தணிக்கை துறையின் சான்றிதழ் பெற்ற பிறகே புதிய படங்களை திரையிட முடியும். இப்போது தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடப்பதால் எந்தப் புதுப் படமும் வெளியாகாமல் உள்ளது. ஆனால் ஸ்ட்ரைக்குக்குப் பிறகு வெளியாகும் படங்களுக்கு தணிக்கைச் சான்று பெற தயாரிப்பாளர் சங்கம் அனுமதிக் கடிதம் தரவேண்டும்.

'காலா' படத்திற்காக தயாரிப்பாளர் சங்க அனுமதி கடிதம் கேட்டு கடந்த மாதம் சங்கத்திற்கு கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதத்தை கொடுக்கவில்லை. அது பற்றி கேட்ட போது, வேலைநிறுத்தம் நடைபெறுவதால் கடிதம் கொடுக்க தாமதம் ஆவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 'காலாவுக்கு தணிக்கை செய்வதற்கான அனுமதி கடிதத்தை கொடுக்காமல், தயாரிப்பாளர் சங்கம் வேண்டும் என்றே தாமதம் செய்கிறது' என்று குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் சங்கம், 'வரிசைப்படிதான் தணிக்கை அனுமதி கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி 'காலா' படத்துக்கும் கொடுப்போம்,' என்று தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் காரணமாக அனுமதி கடிதம் கேட்டவர்கள் அதை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. எனவே, வரிசைப்படி கடிதம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். மற்றப்படி 'காலா' படத்துக்கு கடிதம் கொடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் காலா உள்பட 8 புதிய படங்களை சென்சார் செய்வதற்கான அனுமதிக் கடிதங்களை தயாரிப்பாளர் சங்கம் நேற்று வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











