செங்கல்பட்டு ஏரியாவில் 11 தியேட்டர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு! - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
சென்னை: இனி வரும் புதிய படங்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம, திருவள்ளூர் ஏரியாக்களில் உள்ள 11 தியேட்டர்களில் மட்டுமே திரையிடுவதென்றும், வேறு அரங்குகள் எதற்கும் படங்களைத் தரப் போவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
சினிமாவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை திரையரங்க உரிமையாளர்கள் சிலர் தன்னிச்சையாகக் கையிலெடுத்துள்ளனர்.

ரோகினி பன்னீர் செல்வம் தலைமையிலான செங்கல்பட்டு ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் திரைப்படங்களை சதவீத அடிப்படையில் மட்டுமே திரையிடப் போவதாகக் கூறி தெறி படத்தை வாங்க மறுத்தனர்.
அதாவது இவர்கள் அட்வான்ஸாகவோ, மினிமம் கியாரன்டி என்ற அடிப்படையிலோ எந்த தொகையும் தயாரிப்பாளர்களுக்குத் தராமல், படத்தைப் பெற்றுத் திரையிட்ட பிறகு, வசூலாகும் தொகையில் சதவீத அடிப்படையில் பிரித்துத் தருவார்களாம்.
இதற்கு கலைப்புலி தாணு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். காரணம், பெரிய படங்களை வெளியிடும்போது கண்டபடி விலையை ஏற்றி விற்று நன்றாக சம்பாதிக்கும் இந்த திரையரங்க உரிமையாளர்கள், கணக்குக் காட்டும்போது மிகக் குறைவான விலைக்கு டிக்கெட் விற்றதாகக் காட்டி, குறைவான தொகையையே தயாரிப்பாளர்களுக்குத் தருகிறார்கள் என்பது தாணு வைக்கும் பகிரங்க குற்றச்சாட்டு. நன்றாக ஓடி லாபம் சம்பாதித்த படங்களைக் கூட நஷ்டக் கணக்கு காட்டி தயாரிப்பாளர்களை தியேட்டர்காரர்கள் ஏமாற்றுவதாக அவர் புகார் கூறியுள்ளார்.
எனவே இனி சதவீத முறையிலெல்லாம் படங்களைத் தர முடியாது என்று கூறி, உறுதியாக தெறி படத்தைத் தர மறுத்துவிட்டார்.
செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள
1. ஏஜிஎஸ் குழுமம் (வில்லிவாக்கம் & ஓஎம்ஆர்)
2. மாயாஜால் - கானத்தூர்
3. ஜாஸ் சினிமாஸ் - வேளச்சேரி
4. ஃபேம் இண்டர்நேஷனல் - விருகம்பாக்கம்
5. பிவிஆர் சினிமாஸ் - வேளச்சேரி
6. எஸ் 2 தியாகராஜா - திருவான்மியூர்
7. எஸ் 2 - பெரம்பூர்
8. கணபதிராம் - அடையார்
9. மீரா - திருவள்ளூர்
10. வெற்றிவேல் முருகன் - பொன்னேரி
11. எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் - சாலிகிராமம்
ஆகிய பதினோரு அரங்குகளில் மட்டும்தான் தெறி படம் திரையிடப்பட்டது. எனவே இனி வரும் காலங்களில் இந்த பதினோரு அரங்குகளுக்கு மட்டுமே புதிய படங்களைத் தருவது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











