டைரக்டர் என் பேச்சைக் கேட்கவில்லை - படத்தை ரீ-எடிட் செய்தது பற்றி 'சோலோ' தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை : துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா சர்மா ஆகியோர் நடித்த இருமொழிப்படமான 'சோலோ' கடந்த வாரம் வெளியானது.
ஆந்தாலஜி வகையில், நான்கு கதைகள் சேர்ந்த இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையடுத்து, இயக்குனர் பிஜோய் நம்பியாரின் அனுமதி பெறாமலேயே க்ளைமாக்ஸை ரீ-எடிட் செய்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு. இது மலையாளத் திரையுலகில் சர்ச்சையை உண்டாக்கியது.

படக்குழுவினர் வருத்தம்
இதற்கு இயக்குனர் பிஜோய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தம் கலந்த கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். தயவுசெய்து 'சோலோ' படத்தைக் கொன்று விடாதீர்கள் என துல்கர் சல்மான் உருக்கமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

க்ளைமாக்ஸில் திருப்தி இல்லை
இந்நிலையில், ஏன் ரி-எடிட் செய்தோம் என தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார். 'படத்தின் வேலைகள் முடிந்தபின், நானும் ஒரு ரசிகனாக இந்தப்படத்தை பார்த்தபோது, ருத்ராவின் உலகம் அதாவது நான்காம் பகுதியில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ஏற்கும் விதமாக இல்லை.

க்ளைமாக்ஸ் மாற்றச் சொன்னேன்
அதனால் இயக்குனரிடம் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் மாற்றுங்கள் எனக் கூறினேன். த்ரிலோக்கின் உலகம் ஒரு க்ளைமாக்ஸ்க்கு உண்டான நிறைவுடன் இருந்ததால், அந்த எபிசோடை கடைசியாக வைக்கும்படியும் சொன்னேன்.

டைரக்டர் கேட்கவில்லை
ஆனால் நான் சொன்ன எதையுமே காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் இயக்குனர். எதிர்பார்த்தது போலவே படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களே நிறைய வர ஆரம்பித்தன.

வேறு வழியில்லை
வேறுவழியில்லாத நிலையில் தான் ரசிகர்களை திருதிப் படுத்தும் பொருட்டு 'சோலோ' படத்தை ரீ-எடிட் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது' என விளக்கம் அளித்துள்ளார் 'சோலோ' படத்தின் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ.


Click it and Unblock the Notifications











