ஹாலிவுட் படங்களுக்கு அப்படி, நமக்கு மட்டும் இப்படியா? தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் திடீர் அறிக்கை!
சென்னை: திரையரங்குகளில் படங்களை திரையிட, வி.பி.எப் கட்டணத்தை செலுத்தாமல் இருக்க முன் வரவேண்டும் என்று தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்கிற முரளி ராமநாராயணன் கூறியுள்ளார்.
இந்த சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ்
சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டூடியோவில், 22- ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், சங்கத்தின் தலைவர் பதவிக்கு டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்கிற முரளி ராமநாராயணன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

அனுமதித்த முதல்வர்
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க நலம் காக்கும் அணியின் தலைவர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்கிற முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதித்த தமிழக முதல்வருக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும் நன்றி.

வி.பி.எப் கட்டணம்
அதே நேரம் சக தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், திரையரங்குகளில் படங்களை திரையிட நாம் இதுவரை செலுத்தி வந்த வி.பி.எப் கட்டணத்தை செலுத்தாமல் இருக்க முன் வரவேண்டும். கியூப்., யூ.எப்.ஓ போன்ற நிறுவனங்கள், ஹாலிவுட் படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் வி.பி.எப் கட்டணம் வசூலிப்பதில்லை.

ஏராளமான தொகை
மாறாக கொள்ளை லாபம் ஈட்ட ஏராளமான தொகையை நம்மிடம் இருந்து வசூலித்துள்ளன. எனவே நாம் விழுப்புணர்வோடு, ஒற்றுமை உணர்வுடன் இந்த கட்டணத்தை செலுத்தாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்றுபட்டு வெல்வோம்
எங்களின் இந்த நிலைப்பாட்டை, நான்கு மாதங்களுக்கு முன்பே தெரிவித்துள்ளோம். அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் வி.பி.எப் கட்டணம் செலுத்தாமல் நான் ஒன்றுபட்டு வெற்றிபெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முரளி ராமநாராயணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











