விஷாலுக்கும் விஜய் சேதுபதிக்கும் தரவேண்டியதெல்லாம் தந்தாச்சு: நந்தகோபால்
நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி ஏதும் தரவேண்டியது இல்லை என தயாரிப்பாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு தான் சம்பள பாக்கி எதுவும் தர வேண்டியது இல்லை என தயாரிப்பாளர் நந்தகோபால் விளக்கமளித்துள்ளார்.
நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு ஆகியோருக்கு, மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், 96 படத்தின் தயாரிப்பாளருமான நந்தகுமார் ஊதியபாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஒத்துழையாமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டை தயாரிப்பாளர் நந்தகோபால் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்துள்ளது. அதில் யாருடைய கையெழுத்தும் இல்லை.
இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கிவிட்டேன்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லையெனில் நான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளேன்.
தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன்", என நந்தகோபால் கூறினார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் உள்ள காம்படிடிவ் கமிஷன் ஆப் இந்தியாவில் முறையிட இருப்பதாகவும் நந்தகோபால் கூறினார்.


Click it and Unblock the Notifications











