'கருப்பாக இருப்பதால் குறைந்த சம்பளமா?' - தயாரிப்பாளர் விளக்கம்!
திருவனந்தபுரம் : கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' என்ற படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சக்காரியா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய இந்தப் படத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சாமுவேல் ஆப்ரஹாம் என்கிற நடிகர் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
நிற வேற்றுமையால் படத்தில் நடிக்க தனக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதாக வேதனையுடன் கூறினார் சாமுவேல் ஆப்ரஹாம். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சூடானி ஃப்ரம் நைஜீரியா
சக்காரியா இயக்கிய 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' என்ற படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப்படத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சாமுவேல் ஆப்ரஹாம் என்கிற நடிகர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வேதனை
நைஜீரியா திரும்பிய சாமுவேல், இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் நிற வேற்றுமை காரணமாக தன்னை கீழாக நடத்தினார்கள் என்றும் சாதாரண நடிகர்களுக்கு வழங்கிய சம்பளத்தை விட நாயகனாக நடித்த தனக்கு குறைவான சம்பளத்தை கொடுத்தார்கள் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

தயாரிப்பாளர் விளக்கம்
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஷிஜு காலியத் சாமுவேலின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "சாமுவேல் எங்களது சம்பள ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான் படத்தில் நடித்தார்.

லாபம் வந்தால்
அவருக்கு பேசிய தொகை முழுவதையும் முன்கூட்டியே கொடுத்து விட்டோம். படம் வெளியாகி வெற்றிபெற்று லாபம் வரும் பட்சத்தில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கு சாமுவேல் உட்பட இன்னும் சில நடிகர்களுக்கும் தருவதாக சொல்லியிருந்தோம்.

அவருக்கு சேரவேண்டியதை கொடுப்போம்
இப்போது படம் நன்றாக ஓடுகிறது. கணக்கு வழக்குகள் எங்கள் கைகளுக்கு வந்துசேர கொஞ்ச காலம் ஆகும். ஆனால் சாமுவேல் அதற்குள் எங்க மீது இப்டி குற்றம் சாட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் அவரது மனவருத்ததை போக்கி, அவருக்கு சேரவேண்டியத்தை கொடுப்போம்" என கூறியுள்ளார் ஷிஜு காலியத்.


Click it and Unblock the Notifications











