திருட்டு வீடியோ புகார்... பிவிஆரில் '24' படம் திரையிடுவது நிறுத்தம்!
சென்னை: 24 படத்தின் திருட்டு டிவிடி பிவிஆர் மாலில் தயாரானது தெரிய வந்துள்ளதால், இனி பிவிஆரில் 24 படத்தைத் திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திருட்டு வீடியோ பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. தியேட்டர்களிலேயே திருட்டு வீடியோ எடுப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.

சில தினங்களுக்கு முன் நடிகர் விஷாலும் இதைக் குறிப்பிட்டு, தியேட்டர்காரர்கள் இந்த மாதிரி காரியங்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர், வெளிநாட்டிலிருந்துதான் திருட்டு வீடியோ வருவதாகக் கூறி சவால் எல்லாம் விட்டார்.
ஆனால் இப்போது சூர்யா நடித்த 24 படத்தின் திருட்டு வீடியோ பிரபலமான பிவிஆர் மால் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிவிஆர் குழும திரையரங்குகளுக்கு நாட்டில் நல்ல பெயர் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட திரைகளைக் கொண்ட குழுமம் அது. அந்த குழுமத்தின் ஒரு தியேட்டரிலிருந்து 24 படத்தின் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டது திரையுலகையே அதிர வைத்துள்ளது.
பெங்களூர் ஓரியன் மாலில் உள்ள பிவிஆர் அரங்கில்தான் இந்த திருட்டு வீடியோ எடுக்கப்பட்டிருப்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உறுதி செய்துள்ளார். இதனை எந்த பார்வையாளரும் எடுக்கவில்லை. மாறாக தியேட்டர் ஆபரேட்டர் தனி கேபிள் போட்டு பதிவு செய்திருப்பதை பெங்களூர் விநியோகஸ்தர் உறுதி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிவிஆர் அரங்கில் 24 படம் திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளதாக ஞானவேல்ராஜா அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











