ஹீரோவை கேட்க முடியாத தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மீது பழி போடுவதா?: விக்ரமன் ஆவேசம்
சென்னை: படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராத ஹீரோவை கேட்க முடியாத தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மீது பழி போடும் நிலை மாற வேண்டும் என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்தார்.
கோவை தம்பி தயாரித்துள்ள உயிருக்கு உயிராக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,

இயக்குனர் மீது பழி
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை அனைவரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் அதே படம் தோல்வி அடைந்துவிட்டால் இயக்குனர் மீது பழியை போட்டுவிடுகின்றனர் என்றார் விக்ரமன்.

என்ன நியாயம்?
படம் தோல்வி அடைந்தால் இயக்குனர் மட்டுமே பொறுப்பு என்கிறார்கள். ஒரு படம் தோல்வி அடைய பல காரணங்கள் இருக்கக்கூடும். அப்படி இருக்கையில் இயக்குனர் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார் விக்ரமன்.

தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
நிறைய செலவு வைத்துவிட்டார் என்று தயாரிப்பாளர் இயக்குனர் மீது குற்றம் சுமத்துவார். படப்பிடிப்புக்கு ஹீரோ சரியான நேரத்தில் வரவில்லை என்றால் ஒரு நாளில் 3 காட்சியை படமாக்க நினைத்த இயக்குனரால் ஒரேயொரு காட்சியை மட்டுமே படமாக்க முடியும். இதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கும், செலவும் அதிகரிக்கும்.

ஹீரோவை கேட்க முடியல
ஹீரோவை தட்டிக் கேட்க தயாரிப்பாளர்களால் முடியவில்லை. ஆனால் இயக்குனர்கள் மீது பழி போடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றார் விக்ரமன்.


Click it and Unblock the Notifications











