முதல் முறையாக ஏகப்பட்ட தலைகள் மோதும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!
ஒரு பக்கம் அரசியலில் சசிகலா அன்ட் கோ ஏற்படுத்தியுள்ள பரபரப்பு உச்சத்திலிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச அமைப்பான தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
வரும் மார்ச் 5-ம் தேதிதான் தேர்தல். இதில் நான்கைந்து அணிகள் கச்சைக் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

இப்போதைய தலைவர் கலைப்புலி தாணு, இந்த முறை மீண்டும் போட்டியிடப் போவதில்லை என விலகிக் கொண்டார். அவர் பதவி வகித்த இந்த இரண்டு ஆண்டுகள்தான் இந்த அமைப்பு கோர்ட், கேஸ் என அலையாமல் அமைதியாக இருந்தது. 'நமது அருமை புரியட்டும் என்றுதான் அமைதியாக ஒதுங்குகிறேன்,' என்று கூறி, நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கிறார் கலைப்புலி தாணு.
மற்றொரு பக்கம், இப்போதைய பொதுச் செயலர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்களாக சுரேஷ் காமாட்சி, கே ராஜன் போன்றவர்கள் போட்டியிடுகின்றனர். ஜேஎஸ் சதீஷ்குமாரும், சிவசக்தி பாண்டியனும் பொதுச் செயலாளர்களாக நிற்கிறார்கள்.
இன்னும் இரண்டு அணிகளை அமைக்கும் முயற்சியும் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் பக்கம் விஷால் தொடை தட்டிக் கொண்டு தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள்.
"நடிகர் சங்கம் மாதிரி நினைத்துவிட்டார் விஷால். அவர் என்ன முயற்சித்தாலும் சங்கத்தின் நிர்வாகத்தில் அனுமதிக்க முடியாது," என வேறுபாடுகளை மறந்து அணி திரண்டு நிற்கின்றனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
"விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடியவிருக்கிறது. அவர் என்ன சாதித்து விட்டார் அங்கு? கட்டடம் கட்டுவதாகச் சொல்லித்தான் பதவிக்கே வந்தார். இன்று வரை ஷாமியானா பந்தல் கூட நிரந்தரமில்லை என்ற நிலை. அவர் சாதித்த லட்சணம் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் தெரியும்," என்கிறார் ஆரம்பத்திலிருந்து விஷாலை கடுமையாக எதிர்த்து வரும் கேஎஸ் ராதாகிருஷ்ணன் அணியின் சுரேஷ் காமாட்சி.
இந்த எதிர்ப்புகளைப் பார்த்து, நடிகர் பிரகாஷ் ராஜையும் ஒரு தலைவர் வேட்பாளராக களமிறக்குகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











