கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்திருக்கும் தயாரிப்பாளர் சங்கம்!
சென்னை : கேபிள் டி.வி பிரச்னை சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. திருட்டு வி.சி.டி, ஆன்லைன் பைரசி போல கேபிள் டி.வி-யில் புதிய படங்கள், பாடல்களை ஒளிபரப்புவதைத் தடுக்க முடியவில்லை.
என்னதான் அவ்வப்போது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் கேபிள் டி.வியில் புதிய படங்கள் ஒளிபரப்புவதை இன்னும் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இதனால் கேபிள் டி.வி ஆபரேட்டர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, தொழில் வரன்முறை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் கடிதம்
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் அனைத்து கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், தயாரிப்பாளர் சங்கத்துடன் நேரடியாக இணைவதற்காக உங்களை வரவேற்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பியிருக்கும் பல குடும்பங்கள்
கேபிள் டி.வி-யை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் இல்லாம் அச்சமின்றி நேர்மையுடனும், சுதந்திரத்துடனும் தொழில் செய்ய கேபிள் டி.வி தொழிலை முறைப்படுத்தி வருமானத்தை பெருக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நேரடியாக இணைப்பு
அதன் முதல்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களை சங்கத்துடன் நேரடியாக இணைக்க இருக்கிறோம். இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்படுகிறது. கேபிள் டி.வி ஆபரேட்டர்களை தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைய அழைக்கிறோம்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் எச்சரிக்கை
நேற்று நெல்லை பகுதியில் ஷூட்டிங்குப் போன விஷால், அங்கு கேபிள் டி.வி ஆபரேட்டர்களைச் சந்தித்து தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் புதிய படங்கள், பாடல்களை ஒளிபரப்பக்கூடாது என எச்சரித்தார். பைரசியை தடுக்க, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கேபிள் ஆபரேட்டர்களோடு இணையும் முடிவை எடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











