நடிகர்கள் மார்க்கெட் தெரியாமல் தயாரிப்பாளர்கள்தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்! - விஷால்
சென்னை: நடிகர்கள் மார்க்கெட் தெரியாமல் தயாரிப்பாளர்கள்தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஃபெப்சி அமைப்புடனான பேச்சுவார்த்தை குறித்தும், நடிகர்கள் சம்பளப் பிரச்சினை குறித்தும் தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஃபெப்சி பிரச்சினை
அவர் கூறுகையில், "தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் எடுக்கிறார்கள். அந்த படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் நிறுத்துவதால்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன. படப்பிடிப்புகளை நிறுத்துவதை அனுமதிக்க முடியாது. பெப்சி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஓரிரு நாட்களில் தீர்வு ஏற்பட்டுவிடும்.

நடிகர்கள் சம்பளம்
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. நடிகர்களின் மார்க்கெட் நிலவரம் தெரியாமல் தயாரிப்பாளர்கள்தான் சம்பளத்தை அதிகம் கொடுக்கிறார்கள்.

தியேட்டர்களை கம்ப்யூட்டர்மயமாக்கணும்
அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்கி வெளிப்படையாக்குவதன் மூலம் படங்களின் உண்மையான வசூல் நிலவரத்தையும் நடிகர்களின் மார்க்கெட்டையும் அறிந்து கொண்டு சம்பளத்தையும் நிர்ணயிக்க முடியும்.

கேளிக்கை வரி ரத்து
கேளிக்கை வரியை ரத்து செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து முடிவுக்காக காத்து இருக்கிறோம். கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் சினிமா தொழிலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

கட்டடமும் திருமணமும்
நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் எனது திருமணம் நடக்கும்.

கமல் அரசியல்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன். அவர் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசிவருவது வரவேற்கத்தக்கது," என்றார் விஷால்


Click it and Unblock the Notifications











