ரஜினி நடிக்கும் 2.0.... பாகுபலியின் இரு பாகங்களையும் மிஞ்சும் பட்ஜெட்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பட்ஜெட், எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங்களின் மொத்த பட்ஜெட்டையும் மிஞ்சியுள்ளது.
இதனை 2.0 பட தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அக்ஷய் குமார்
ரஜினிகாந்த்-துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

ஜெயமோகன் - நீரவ் ஷா
வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

ரூ 350 கோடியைத் தாண்டும்
இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ் கரன் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் கூறுகையில், "படத்தின் பட்ஜெட் குறித்து இப்போது தெரியவில்லை. ஆனால் எப்படியும் 350 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் படம் சிறப்பாக வரத் தேவையான பணத்தைச் செலவிடுவோம்.

வசூல் நம்பிக்கை
ரஜினி மற்றும் அக்ஷய் குமாரால் நல்ல வசூல் ஆகும்... போடும் தொகையை எடுத்துவிடுவோம் என நம்பிக்கை வைத்துள்ளோம்," என்று கூறியுள்ளார்கள்.

பாகுபலி
எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு மொத்தமாக ரூ 350 கோடி என்று முதலில் அறிவித்தனர். இதில் முதல் பாகம் வெளியாகி ரூ 500 கோடிக்கு மேல் வசூல் குவித்துவிட்டது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது.

மிஞ்சியது
பட்ஜெட்டைப் பொருத்தவரை, இந்தியாவில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் 2.0-தான். பாகுபலி 1 & 2-ன் மொத்த பட்ஜெட் இந்தப் படம். ஷங்கர் இன்னும்கூட அதிகம் செலவு வைக்கக் கூடியவர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











