பட ரிலீஸில் தியேட்டர்காரர்கள் பிரச்சினை... மாற்று வழிகளை யோசிக்கும் தயாரிப்பாளர்கள்!
புதிய படங்களை வெளியிடுவதில் தியேட்டர்காரர்களும் இடைத் தரகர்களும் தொடர்ந்து முட்டுக் கட்டை போடுவதாலும், பல நெருக்கடிகளை உருவாக்குவதாலும் மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
இன்றைக்கு சிறிய படங்களை தியேட்டர்களில் வெளியிடும் தயாரிப்பாளர்கள், தங்களுக்கான வருவாயை தியேட்டர்காரர்களிடம் சரிவர வசூலிக்க முடியாத நிலை உள்ளது.

பெரிய படங்களை அட்வான்ஸ் அல்லது எம்ஜி என எந்தவித பாதுகாப்புமின்றி தியேட்டர்காரர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் கையை எதிர்ப்பார்க்கும் நிலைமை உண்டாகியுள்ளது.
திரைத்துறையை தியேட்டர்காரர்களும், தியேட்டர்களை கையில் வைத்திருக்கும் இடைத் தரகர்களும் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் தங்கள் படங்களை நேரடியா தியேட்டர்களில் வெளியிடும்போதே, டிடிஎச், இணையதளம் மற்றும் செல்போன்களில் வெளியிட்டு விடலாமா என யோசித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
இவற்றில், டிடிஎச் மூலம் படத்தை வெளியிடும் முயற்சியை ஏற்கெனவே கமல் ஹாஸன் தனது விஸ்வரூபம் பட ரிலீஸின்போது முயற்சித்தார். ஆனால் தியேட்டர்காரர்கள் பெரும் பிரச்சினை செய்து பட வெளியீட்டைத் தடுத்தனர்.
ஆனால் இந்த முறை தயாரிப்பாளர்கள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்து படங்களை வெளியிட முயற்சித்தால் தியேட்டர்காரர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. காரணம் விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ததால் இந்திய போட்டிகள் ஆணையம் அவர்கள் மீது தொழில் செய்யும் உரிமையைத் தடுத்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.
எனவே இந்த முறை டிடிஎச், இணையதளங்கள் மற்றும் செல்போனில் படங்களை வெளியிட முயற்சித்தால் யாராலும் அதைத் தடுக்கவும் முடியாது என்பதால், இந்த மாற்று வழிகளில் படங்களைத் திரையிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











