தெலுங்கில் பெரும் போராட்டத்துக்குப் பின் ஒருநாள் தாமதமாக இன்று ரிலீஸானது 'புலி'
ஹைதராபாத்: நடிகர் விஜயின் புலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் பெரும் போராட்டத்துக்கு பின்னர் ஒருநாள் தாமதமாக இன்று வெளியாகி உள்ளது.
விஜயின் புலி திரைப்படம் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் நேற்று வெளியானது. இதே போன்று கர்நாடகா மற்றும் சில உலகநாடுகளிலும் வெளியானது.

ஆனால் புலியின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நேற்று வெளியாகவில்லை. இதனை ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அத்துடன் நடிகர் விஜய் ஏதாவது செய்தால் மட்டுமே புலி வெளியீடு சாத்தியம் என்றும் தெரிவித்து இருந்தது.
மேலும் நேற்று முன்பதிவு செய்து வைத்திருந்த ரசிகர்களின் பணத்தையும் திரையரங்குகள் திரும்பக் கொடுக்க ஆரம்பித்தன. இந்த நிலையில் நேற்றிரவு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் புலியின் தெலுங்கு பதிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இதனை இன்று காலை ட்விட்டர் பக்கத்தில் ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் உறுதி செய்திருக்கின்றனர்.
புலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஒரு நாள் தள்ளிப் போனதன் காரணமாக சுமார் ரூ3 கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 8 கோடி ரூபாய்க்கு புலி படத்தின் தெலுங்கு பதிப்பு விற்பனையாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புலி நேற்று வெளியாகாததால் இன்று நேரடித் தெலுங்குப் படமான சிவம் மற்றும் அக்சய் குமாரின் சிங் இஸ் ப்ளிங் போன்ற படங்களுடன் பாக்ஸ் ஆபீஸைப் பகிர்ந்து கொள்கிறது விஜயின் புலி.
அதே நேரத்தில் புலி படத்தின் தெலுங்குப் பதிப்பு நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் ஆந்திர பாக்ஸ் ஆபீஸில் புலி திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











