மூன்றாவது முறையாக.. பெப்சி தலைவரானார் ஆர்.கே.செல்வமணி.. போட்டியின்றி தேர்வு!
சென்னை: தென்னிந்திய திரைப்பட சம்மேளனமான 'பெப்சி'யின் தலைவராக, இயக்குனர் ஆர்.கே செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) 2021-23 ஆண்டுகளுக்கான தேர்தல் வரும் 14-ம் தேதி நடக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.
சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் இந்த தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

தேர்தல் அதிகாரி
தலைவர், செயலாளர், பொருளாளர், 5 துணைத் தலைவர்கள், 5 இணை செயலாளர்கள் என 13 நிர்வாகிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது என்றும் 3-வது முறையாக தலைவர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். முன்னாள் நீதிபதி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆர்.கே.செல்வமணி
பெப்சி அமைப்பில் உள்ள 23 சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என 69 பேர் வாக்களிக்க இருந்தனர். இந்நிலையில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவராக, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்வு
மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக அங்கமுத்து சண்முகமும் பொருளாளர் சுவாமிநாதனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைத் தலைவர்களாக தினா, ஜே.ஶ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், ஶ்ரீப்ரியா தேர்வாகியுள்ளனர்.

தலைவர் என்.ராமசாமி
தேர்வான நிர்வாகிகள் இன்னும் சில நாட்களில் பதவியேற்க இருப்பதாக பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











