மலையாளப்படத்தில் ராஜாவாக நடிக்கும் 'பாகுபலி' பல்வாள்தேவன்!
கொச்சின் : ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் 'பாகுபலி' எடுக்கப்பட்டது போல், மலையாளத்தில் 'அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா - கிங் ஆஃப் திருவிதாங்கூர்' என்ற படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.
இந்தப் படம் கேரளாவில் திருவிதாங்கூர் மாகாணத்தை ஆண்ட மகாராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகிறது.
இந்தப் படத்தில் திருநாள் மார்த்தாண்டவர்மா ராஜா கேரக்டரில் 'பாகுபலி'யில் பல்வாள் தேவனாக நடித்த ராணா நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான கே.மது இயக்குகிறார்.

பாகுபலி அரசன்
'பாகுபலி' படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டார் ராணா. கேரளாவிலும் பாகுபலி படம் ராணாவுக்கான விசிட்டிங் கார்டாக மாறிவிட்டது. 'பாகுபலி' முதல் பாகம் வெளியானபோதே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் ராணாவை மலையாளத்தில் நடிக்க வைக்க விரும்பினர்.

அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா - கிங் ஆஃப் திருவிதாங்கூர்
ஆனாலும் நீண்ட நாட்களாக பிடிகொடுக்காமல் இருந்த ராணா, இப்போது முதன்முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்கச் சம்மதித்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்கும் 'அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா - கிங் ஆஃப் திருவிதாங்கூர்' என்கிற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் ராணா.

இயக்குநர் கே.மது
மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு' படம் உட்பட பல மலையாள படங்களை இயக்கியவர் கே.மது. தவிர, தமிழில் 'மௌனம் சம்மதம்' என்ற படத்தை இயக்கியவரும் இவர்தான்.

ஆகஸ்டில் ஷூட்டிங்
இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி கலைஞர்களும் நடிக்கவிருக்கின்றனர்.

அனைத்து இந்திய மொழிகளிலும்
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும், ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். 'பாகுபலி' படத்தைப் போல் இந்தப் படத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











