பாமக தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்தால் ராமதாஸ் ஒத்துழைக்க மாட்டாரா?-ராதாரவி

அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியனை ஆதரித்து கடையநல்லூர் தொகுதி பண்பொழி, அச்சன்புதூர், வடகரை, காசிதர்மம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் ராதாரவி நேற்று இரவு கடையநல்லூர் பூங்கா அருகில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது,
நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் தேர்தலாகும். அதிமுக இயக்கம் வாழ பிறந்தவர்கள் இயக்கம் என்பதை நிருபித்து காட்டுங்கள்.
என்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் தி்முக அரசை வீழ்த்துவதற்காக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டுமென்று ஒரே லட்சியத்திற்காக அதனை வேண்டாம் என்று கூறினேன்.
திமுக ஆட்சியில் அனைத்து துறையும் சீரழிந்து விட்டது. அடுத்தவரை வாழவைக்க கூடாது என்ற எண்ணத்தில் ஆட்சி நடத்துபவர் தான் கருணாநிதி.
விஜயகாந்த் படத்தை ரீலிஸ் செய்வதற்கு பிரச்சனை தருகிறார்கள். விஜய் படத்தை வெளியிடவும் பிரச்சனைதான். சினிமாகாரர்கள் அரசியலுக்கு வரகூடாது என்கிறார் பாமக தலைவர் ராமதாஸ். ஆனால் அவர்களது கட்சி தொகுதிக்கு குஷ்பு வந்தால் ஓத்துழைக்க மாட்டார்களா, நெப்போலியன் வந்தால் ஓத்துழைக்க மாட்டார்களா.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று வடிவேலு தெரிவித்தாரே. அப்படி என்றால் ரிஷிவந்தியத்தில் வடிவேலு நிற்காதது ஏன்.
ஒரு ரூபாய் அரிசி என்று கூறுகிறார்கள். அந்த அரிசியை மாடு கூட தின்ன மறுக்கிறது. ஒரு ரூபாய் அரிசியை கருணாநிதி சாப்பிடுவாரா. 2 ஏக்கர் நிலம் என கூறி அனைவரையும் ஏமாற்றி விட்டார். வாய் வித்தைகளால் அரசியல் ஓட்டுகிறார் கருணாநிதி.
நான் என்றால் உதடுகள் ஓட்டாது. நாம் என்றால்தான் உதடுகள் ஓட்டும் என முதல்வர் கருணாநிதி பொன்மொழி கூறுகிறாராம். கலைஞர் என்றால்தான் உதடுகள் ஓட்டாது, அம்மா என்றால்தான் உதடுகள் ஓட்டும்.
கிரைண்டர், மிக்சி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான மின்சாரம் எங்கிருந்து தருவார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு சோலார் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவுபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ராதாரவி.


Click it and Unblock the Notifications











