இறங்கி வந்த ராதிகா... பெப்சியுடன் சமரசம்!
சென்னை: பெப்சியை உடைத்து புதிய சங்கம் உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராதிகா சரத்குமார், பெப்சியுடன சமரசமாகப் போவதாகக் கூறிவிட்டார்.
பெப்சியை உடைக்கும் எண்ணமே தமக்கில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துடன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) பல மாதங்களாக நடத்திய பேச்சுவார்த்தை முடியாமல் இருந்தது.

பெப்சியை உடைக்க முயற்சி
இதனால் ராதிகா தலைமையிலான சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் தனியாக பிரிந்து தொழிற்சங்கத்தை ஏற்படுத்துவது பற்றி ஆலோசித்து வந்தது. இதையடுத்து நேற்று பெப்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் ராதிகா மற்றும் அவரது தலைமையில் இயங்குவோருக்கு தொழில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

ராதிகா கடிதம்
இதைத் தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவி ராதிகா சரத்குமார், பெப்சிக்கு மாற்றாக புதிய தொழிலாளர் அமைப்பு தொடங்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், இரு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் சம்பளம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதி அளித்துள்ளார்.

ஒத்துழைப்பு
இதையடுத்து இன்று பெப்சி அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சின்னத்திரை தொடர்பான அனைத்து பணிகளுக்கும் பெப்சி தொழில் ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பெப்சி தலைவர் அமீர், பொதுச் செயலாளர் சிவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இருதரப்பும் கடிதம்
இதுதொடர்பாக ராதிகா கையெழுத்திட்டுக் கொடுத்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ளது பெப்சி அமைப்பு.


Click it and Unblock the Notifications











