இரு பெண் திரை வீராங்கனைகளின் மோதல்.. "அம்மா கணக்கு, ராஜா மந்திரி"!
சென்னை: அம்மா கணக்கு, ராஜா மந்திரி ஆகிய திரைப்படங்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ளன. இதில் ஒரு முக்கிய அம்சம் இந்த இரண்டு படங்களுமே பெண் இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்கள்தான்.
கோலிவுட்டில் வாரம் தோறும் பல படங்கள் களம் இறங்குகிறது. நாளை வெள்ளிக்கிழமை மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் இந்த வாரம் வெளிவரும் இரண்டு படங்களின் இயக்குனர்கள் பெண்கள் தான்.

தனுஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அம்மா கணக்கு படம் அஸ்வினி ஐயர் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தனுஷ் , இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இப்படத்தில் இருக்கிறது. படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆளாக்க அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பதை சொல்லியிருக்கிறோம். குழந்தைகளும் பெற்றோர்கள் நமக்கு ஏன் இதெல்லாம் செய்கிறார்கள் என்கிற வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம் என்று கூறினார். இந்த மாதிரி ஒரு முக்கியமான படத்தை கொடுத்ததற்கு அஸ்வினி ஐயருக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தனுஷ் தெரிவித்தார்.

இந்த படத்தில் அமலாபால் நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனரிடம் சொன்னது தனுஷ் தானாம். இதை சமீபத்திய பேட்டியில் அஸ்வினி ஐயர் தெரிவித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இதேபோல் கலையரசன் நடிக்கும் ராஜா மந்திரி படத்தை உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ளார். காதல், நட்பு, நகைச்சுவை கலந்த திரைப்படம் ராஜா மந்திரி. கலையரசன், புதுமுகம் ஷாலினி , காளி வெங்கட், பாலசரவணன் நடித்துள்ளனர்.

பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களில் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த உஷா கிருஷ்ணன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தை பற்றி பேசிய இயக்குநர் உஷா கிருஷ்ணன் , சராசரி ஆண்களும், பெண்களும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் காதல், நட்பு, உறவுகள் மற்றும் அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே, ராஜா மந்திரி படம் என்றார்.

ஒரு கிராமத்தில் வாழும் குடும்பம், அந்த குடும்பத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை கதை சித்தரிக்கிறது என்றார்.மதியழகன், ரம்யா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. நாளை ரிலீஸ் ஆகும் இந்த இரண்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











