பாகுபலி... முதல் பாகம் தமன்னாவுக்கு, அடுத்த பாகம் அனுஷ்காவுக்கு!- ராஜமவுலி
இரண்டு பாகங்களாக வரவிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவமும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளதாக இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி தெரிவித்தார்.
நான் ஈ' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி'. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர்களால பார்க்கப்பட்டு வருகிறது.

இரு பாகங்கள்
படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீட்டுக்காக சென்னை வந்துள்ள இயக்குநர் ராஜமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகுபலி படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.

நேரடி தமிழ்ப் படம்
அதன் 2ஆம் பாகம் 35 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படமல்ல. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கினோம்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்
இப்படத்தில் ஹீரோவை விட ஹீரோயினுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். முதல் பாகத்தில் தமன்னா கதாநாயகியாக வருகிறார். அனுஷ்கா முதல் பாகத்தில் கொஞ்ச நேரம்தான் வந்து செல்வார்.

அனுஷ்கா - தமன்னா
இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கதாநாயகியாகவும் தமன்னா சிறிதளவு வந்து செல்லும்படியாகவும் கதையமைத்திருக்கிறேன். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பவர்புல்லாக இருக்கும்.

சத்யராஜ்
இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இவருடைய ஒத்துழைப்பு படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

4 மொழிகளில்
இப்படத்தை உலகமெங்கும் ஜூலை 10ம் தேதி வெளியிட உள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











