திருடி தான் கதைகள் எழுதுறேன்… கூலாக பதில் சொன்ன ராஜமெளலியின் தந்தை!
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலியின் பெரிய பலமே அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் தான்.
ராஜமெளலி இயக்கிய படங்கள் உட்பட பல இயக்குநர்களுக்கு கதை எழுதியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.
இந்நிலையில், தான் கதை எழுவது குறித்து விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

கதைகளின் மன்னன் விஜயேந்திர பிரசாத்
தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா மார்க்கெட்டை தொடங்கி வைத்தது ராஜமெளலியின் பாகுபலி திரைப்படம் தான். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படங்கள் உட்பட ராஜமெளலியின் மஹதீரா, சிறுத்தை உட்பட பல படங்களுக்கும் கதை எழுதியது ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான். தெலுங்கு மட்டும் இல்லாமல், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'பஜ்ரங்கி பைஜான்' படத்துக்கும் விஜயேந்திர பிரசாத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஆர்.ஆர் செகண்ட் பார்ட்
கடந்த மார்ச் மாதம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனையை படைத்தது. பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ராஜமெளலி கூறியுள்ளார். அதற்கான கதையையும் ராஜமெளலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் தான் எழுதி வருகிறார்.

கதைகளை திருடுகிறேன்
ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்தின் கதையையும் விஜேயந்திர பிரசாத் எழுதி வருவது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், கோவாவில் நடந்த 53வது சர்வதேச திரைப்பட விழாவில் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் "நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். நம் எல்லோரையும் சுற்றியும் ஏராளமான கதைகள் உள்ளன. மகாபாரதம், ராமாயணம் போல அனைவரின் நிஜ வாழ்க்கையிலும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. எனக்கு அங்கிருந்து தான் கதைகள் கிடைக்கின்றன" எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கருத்து
விஜயேந்திர பிரசாத்தின் இந்த கருத்தை திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். தமிழில் மணிரத்னம் இயக்கும் பல படங்களும் ராமாயணம், மஹாபாரதம் கதைகளை பின்னணியாகக் கொண்டு இருக்கும். அதேபோல், மேலும் சில இயக்குநர்களும் தங்களை சுற்றி நடக்கும் கதைகளை தான் படமாக எடுக்கின்றனர். ஆனால், பெரும்பாலான இயக்குநர்களுக்கு கதை தேர்வு குறித்து பெரிய அனுபவம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், விஜேயந்திர பிரசாத் கதை எழுதுவது குறித்து பகிர்ந்துள்ள கருத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











