தனுஷுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்… ராஜாவுக்கு செக் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சேரன் பேச்சு
Recommended Video
சென்னை: அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரம் என்று இயக்குநரும் நடிகருமான சேரன் புகழ்ந்துள்ளார். ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனுஷ் ஒரு புறம் மிகவும் பிஸியாக இருக்கும் கமர்சியல் நடிகர், 55 வயது உடைய ஒரு தகப்பனாக தாடியும் மீசையும் வைத்து கொண்டு, பற்கள் நடுவில் இடுக்கு வைத்து கொண்டு நடிப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருந்திருக்கும் என்று பாராட்டியுள்ளார்.
மலையாள தயாரிப்பாளர்களான சோமன் பல்லட் மற்றும் தாமஸ் கொக்கட் ஆகியோர் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்கள். இப்படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார்.

ஒரு குடும்பத்திற்கான த்ரில்லர் திரைப்படமாக அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே, சரயு மற்றும் நந்தனா வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இயக்குனர் சேரன் இப்படத்தில் நடித்தது பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பல திறமையானவர்கள் இந்த தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். வளர்ந்தும் வருகிறார்கள். ராஜாவுக்கு செக் என்ற இந்த திரைப்படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இப்படம் நிச்சயம் இந்த படக்குழுவினருக்கு மிக பெரிய வளர்ச்சியை கொடுக்கப் போகிறது என்றார்.
பெண் குழந்தை இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் இப்படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டும். அந்த குழந்தைக்கு பத்து புத்தகங்கள் படித்த அனுபவம் இந்த படத்தை பார்ப்பதன் மூலம் கிடைக்கும். இன்றைக்கு நாம் எப்படி பட்ட சமூக சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எப்படிப்பட்ட அபாயமும் பிரச்சனைகளும் நம்மோடு பயணித்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
இந்த படத்தில் நான் ஒரு தகப்பன் கதாபாத்திரத்தில் எப்படி எனது மகளை பாதுகாப்பாக வளர்த்து வருகிறேன் என்பதை உங்களுக்கு ஒரு பிரதிநிதியாக இருந்து கூறியுள்ளேன். பொழுதுபோக்கு படமாக இருப்பினும், பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்கும் போது தங்கள் வாழ்வோடு ஏதாவது ஒரு வகையில் சம்பந்த படுத்துகிற, பரிதவிக்கிற, பயப்படுகிற ஒரு திரைப்படமாக நிச்சயம் இது இருக்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், இப்படத்திற்காக நான் 25 நாட்கள் மட்டுமே உழைத்தேன் என்று கூறினார்.
சமீப காலத்தில் மிகவும் திறமையான படைப்பாளிகள் பலர் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளனர். குறிப்பாக வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தை பார்த்து பிரமித்து விட்டேன். எத்தனை அழகான மொழி ஆக்கத்தை அப்படத்தில் உருவாக்கியுள்ளனர் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
தனுஷின் நடிப்பு அபாரம். ஒரு புறம் மிகவும் பிஸியாக இருக்கும் கமர்சியல் நடிகர், எப்படி ஒரு 55 வயது கொண்ட ஒரு தகப்பனாக தாடியும் மீசையும் வைத்து கொண்டு, பற்கள் நடுவில் இடுக்கு வைத்து கொண்டு நடிப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருந்திருக்கும். அது போன்ற படங்களில் நடிப்பதற்கு எத்தனை நடிகர்கள் துணிச்சலாக ஒத்துழைப்பு கொடுத்து முன்வருவார்கள்.
அது போன்ற படைப்புகளை படைப்பதற்காக நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான படைப்பிற்கு தடையாக இருக்கும் ஒரே சிக்கல் வியாபாரம் தான். நல்ல படைப்பாளிகள் பலர் இந்த பிரச்சனைகளால் தான் தேங்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை என்றார்.
மேலும், நல்ல படங்களை பாராட்டாமல் எந்த பத்திரிக்கையாளர்களும், ஊடகங்களும் இருந்ததே இல்லை. சரியான படத்தை சரியான நேரத்தில் உச்சி முகர்பவர்கள் தான் அவர்கள். அவர்களின் ஆதரவு நிச்சயம் இந்த படத்திற்கும் இருக்கும். ராஜாவுக்கு செக் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றார் சேரன். இது 2020ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











